ஐபிஎல் ஏலம்
தேர்வுக் குழு தலைவராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2008ஆம் ஆண்டு பணியாற்றிய விபி சந்திரசேகர் முதல் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றார். அப்போது அவர் தான் தோனியை தேர்வு செய்ய முக்கிய காரணமாக இருந்தார் என கூறப்படுகிறது.
முதல் தேர்வு யார்?
இது குறித்து விபி சந்திரசேகர் முன்பு அளித்த பேட்டி ஒன்றில் அப்போது என்ன நடந்தது என கூறி இருக்கிறார். 2008 ஐபிஎல் ஏலத்திற்கு முன் உரிமையாளர் சீனிவாசன் நட்சத்திர வீரராக யாரை தேர்வு செய்யப் போகிறீர்கள்? என விபி சந்திரசேகரிடம் கேட்டுள்ளார்.
சேவாக் வேண்டாமா?
அப்போது தோனி பெயரை குறிப்பிட்டுள்ளார் விபி சந்திரசேகர். வீரேந்தர் சேவாக்கை ஏன் தேர்வு செய்யக் கூடாது? என கேட்டுள்ளார் சீனிவாசன். காரணம், சேவாக் நீண்ட நாட்களாக இந்திய அணியில் ஆடி வரும் அனுபவ வீரர் என்பதோடு டி20க்கு ஏற்ற அதிரடி ஆட்டம் ஆடக் கூடியவர்.
தோனி தான் சரி
அதற்கு பதில் அளித்த விபி சந்திரசேகர், சேவாக் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஈடு கொடுக்க மாட்டார். ஆனால், தோனி ஒரு கேப்டன், விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக போட்டியை தனியாக மாற்றக் கூடியவர் என்று கூறி உள்ளார்.
முதல் விதை
அப்படித் தான் தோனியை தேர்வு செய்து இருக்கிறார் விபி சந்திரசேகர். அதன் பின் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரிக்க முடியாத அங்கமாக மாறியது வரலாறு. அதற்கு முதல் விதை போட்டது விபி சந்திரசேகர் தான்.
டிஎன்பிஎல் அணி
விபி சந்திரசேகர் டிஎன்பிஎல் தொடர் துவங்கப்பட்ட போது அதில் காஞ்சி வீரன்ஸ் அணியை வாங்கினார். மற்ற அணிகளை பெரிய நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் வாங்கிய நிலையில், ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரராக, கிரிக்கெட் மீது கொண்ட பந்தம் காரணமாக அந்த அணியை வாங்கினார்.
காரணம் என்ன?
எனினும், காஞ்சி வீரன்ஸ் அணி மற்றும் மற்ற கிரிக்கெட் தொடர்புகளில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதுவும், விபி சந்திரசேகர் மரணத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. முதலில் மாரடைப்பால் மரணம் என கூறப்பட்ட நிலையில், தற்கொலை என்றும் தகவல்கள் வந்துள்ளன. காவல்துறை விபி சந்திரசேகர் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.