திண்டுக்கல்: உலக கோப்பையில் காயம் காரணமாக வெளியேறிய விஜய் சங்கர், டிஎன்பில் தொடரின் முதல் போட்டியிலும் காயத்தால் விளையாட வில்லை.
உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் இருவரும் அணியில் தேர்வாகினர். பெரிதாக சோபிக்காத ஆல் ரவுண்டர் விஜய் சங்கர், காயம் காரணமாக தொடரில் பாதியில் இருந்து வெளியேறினார்.
உலக கோப்பை தொடருக்குப்பின் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடுகிறது. அதற்கான அணி ஞாயிறன்று அறிவிக்கப்படுகிறது. காயம், அதற்கான சிகிச்சை முறை குறித்த அறிக்கையை தேசிய கிரிக்கெட் அகாடமியில் விஜய் சங்கர் சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கை மீதும் திருப்தி ஏற்பட்டால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வீரர்கள் தேர்வில் பரிசீலிக்கப் படுவார்கள். அதே நேரத்தில் விஜய் சங்கர் டிஎன்பில் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கேப்டனாக இருக்கிறார்.
அவர் டிஎன்பில் தொடரில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காயம் காரணமாக விஜய் சங்கர் அணியில் தேர்வாக வில்லை என்று அறிவிக்கப்பட்டது.
விஜய் சங்கர் விளையாடததால், கேப்டனாக கவுசிக் காந்தி தேர்வு செய்யப் பட்டுள்ளார். கிட்டத்தட்ட இந்த தொடரின் பாதி போட்டிகள் வரை அவர் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.