எஸ்ஆர்எச் வீரர் விஜய் சங்கர்
ஐபிஎல் 2021 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார் அணியின் துவக்க வீரர் விஜய் சங்கர். நேற்றைய கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் களமிறங்கிய அவர் 7 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 11 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். மேலும் ஒரு ஓவரை பௌலிங் செய்து 14 ரன்களை கொடுத்திருந்தார்.
தவிப்பில் விஜய் சங்கர்
இந்திய அணியை பொருத்தவரை கடந்த 2019 உலக கோப்பை தொடரில் தனது ஆல்-ரவுண்டர் செயல்பாட்டிற்காக வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த விஜய் சங்கர், தொடரில் சொதப்பியதையடுத்து தொடர்ந்து இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். ஆயினும் தொடர்ந்து ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
மெனக்கெட போவதில்லை
இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெறுவதற்காக தான் மெனக்கெட போவதில்லை என்று விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். கிரிக்இன்போவிற்காக பேசிய அவர், இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து அதிகமாக யோசிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
சிறப்பாக எதிர்கொள்ள திட்டம்
ஒவ்வொரு போட்டியையும் ஒவ்வொரு தருணத்தையும் தான் என்ஜாய் செய்து விளையாடவுள்ளதாகவும் விஜய் சங்கர் கூறியுள்ளார். இந்த போட்டியை தான் மிகவும் விரும்புவதாகவும் அதனால் தான் விளையாடும் போட்டிகளை உளப்பூர்வமாக சிறப்பாக எதிர்கொண்டு விளையாட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வேறு திட்டம் தீட்டும் விஜய் சங்கர்
சில நேரங்களில் தன்னுடைய போட்டிகளையே தான் பழைய வீடியோக்களின்மூலம் விரும்பி பார்ப்பதாகவும், இந்திய அணியில் மீண்டும் இடம்பெற வேண்டுமென்றால் மிகுந்த நெருக்கடியுடன் விளையாடி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் ஆனால் தான் அவ்வாறு செய்யாமல், போட்டிகளை விரும்பி விளையாட உள்ளதாகவும், அவ்வாறு செய்தால் தேவையான வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.