காத்திருப்பு
வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான விஜய் சங்கருக்கு கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின்னர் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அணியின் முக்கிய தேர்வாக ஹர்திக் பாண்டியா விளங்கியது, விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக காரணமாக அமைந்தது. ஆனால் இங்கிலாந்து தொடரில் ஹர்திக் பாண்டியா இல்லாத போதும் விஜய் சங்கர் சேர்க்கப்படவில்லை.
வேதனை முடிவு
இதுகுறித்து பேசியுள்ள அவர், நான் மாநில அணியில் 5வது வீரராக பேட்டிங் செய்த பிறகு தான் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. எனவே நான் தொடர்ந்து டாப் ஆர்டரில் களமிறங்கினால் மட்டுமே என்னை நிரூபிக்க முடியும் என எண்ணினேன். ஆனால் தமிழக அணியில் அதற்கான வாய்ப்பு குறைவு. இதனால் தமிழக அணியை விட்டுவிட்டு வேறு மாநிலத்திற்காக ஆடவும் யோசனை இருந்தது.எனினும் தமிழக வாரியம் என்னை டாப் 4 அல்லது 5வது வீரராக களமிறக்குகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன்
இந்திய அணியில் எனக்கு கிடைத்த சிறிய வாய்ப்புகளிலும் நான் சிறப்பாக ஆடினேன். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 தொடரில் கூட நான் 3 அல்லது 4வது வீரராக ஆடிய போது நல்ல ஸ்கோரை அடித்தேன். ஆனால் என் பேட்டிங் வரிசை நிலையானதாக இல்லை. பேட்டிங் பொசிஷன் மாறிக்கொண்டே இருந்தது. கிரிக்கெட்டில் அனைத்து நிலைகளிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும், ஆனால் சில நேரங்களில் அப்படி இருப்பது மிகவும் கடினம்.
மன வருத்தம்
இந்திய அணியில் விளையாடிய ஒவ்வொருவரும் மீண்டும் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். நானும் அப்படி தான் நினைக்கிறேன். ஆனால் நான் சிறப்பாக ஆடிய போதும் வாய்ப்பு கிடைக்காதது சிறிய வருத்தமாக உள்ளது.
நான் ஒரு ஆல்ரவுண்டர், பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு பயன்படுவதற்காக மட்டும் அணியில் விளையாட விரும்பவில்லை. எனது திறமையை அணியினர் நம்பி எனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.