நேர்காணல்
இந் நிலையில், உதவி பயிற்சியாளர்களுக்கான நேர்காணலை எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான இந்திய அணியின் தேர்வு குழு கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடத்தியது. முடிவில் பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருணும், பீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதரும் தொடருவதாக அறிவிக்கப்பட்டது.
வந்தார் பரத் அருண்
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில், பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் விண்ணப்பித்து இருந்தார். ஆனாலும், அவரை பரத் அருண் பின்னுக்கு தள்ளி பவுலிங் பயிற்சியாளராக வந்தார் பரத் அருண்.
பரிந்துரையில் முதலிடம்
ஒரே ஒரு பயிற்சியாளரை தவிர மற்றவர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு முன்பு பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் இருந்தார். அவர் மட்டும் இப்போது மாற்றப்படுகிறார். பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் முடிவில் விக்ரம் ரதோரை அந்த பொறுப்புக்கு பரிந்துரை செய்து அவருக்கு முதலிடத்தை தேர்வு கமிட்டி வழங்கியுள்ளது.
உறுதியானது முடிவு
பட்டியலில் சஞ்சய் பாங்கர் 2வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் மார்க் ராம் பிரகாஷ் 3வது இடத்திலும் உள்ளனர். அதன் மூலம் விக்ரம் ரதோர் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவது உறுதியாகி விட்டது. அவர் தான் இனி இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்.
விக்ரம் ரதோர் யார்?
இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான பஞ்சாப்பை சேர்ந்தவர் விக்ரம் ரதோர். 50 வயதான அவர் இந்திய அணிக்காக 7 ஒரு நாள் போட்டியில் ஆடி 193 ரன்களும், 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 133 ரன்களும் எடுத்து இருக்கிறார்.
33 சதம்
சர்வதேச போட்டிகளில் அவரின் சாதனை என்றும் எதுவும் பதிவாக இல்லை. இன்னும் சொல்ல போனால் சாதிக்கவே இல்லை என்று கூறலாம். முதல்தர கிரிக்கெட்டில் 146 ஆட்டங்களில் பங்கேற்று 33 சதம் உள்பட 11,473 ரன்கள் குவித்து இருக்கிறார். இந்திய அணியின் தேர்வு குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.
அனுபவம் உள்ளது
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: விக்ரம் ரதோருக்கு போதிய அனுபவம் இருக்கிறது. பயிற்சியாளருக்குரிய அவரது திறமையில் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது என்றார்.
சுனில் சுப்பிரமணியம்
இந்திய அணியின் உடல்தகுதி நிபுணராக நிதின் பட்டேல் மீண்டும் நியமிக்கப் படுகிறார். வெஸ்ட் இண்டீசில் தூதரக அதிகாரிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட நிர்வாக மேலாளர் சுனில் சுப்பிரமணியம் அந்த பொறுப்பில் இருந்து கழற்றி விடப்பட்டார். அவருக்கு பதிலாக அணியின் புதிய மேலாளராக கிரிஷ் டோங்ரே தேர்வாகிறார்.