ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2021
கொரோனா பாதிப்பையடுத்து ஐபிஎல் 2021 தொடர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தந்த அணிகளை சேர்ந்த வீரர்கள் தங்களது சொந்த ஊர்கள் மற்றும் நாடுகளுக்கு சென்று வருகின்றனர். ஐபிஎல் போட்டிகள் மீண்டும் துவங்கும் தேதியை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.
கொரோனா பாதிப்பில் உதவி
இந்நிலையில் ஐபிஎல் 2021 தொடர் தள்ளி வைக்கப்பட்டவுடன் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தன்னுடைய வீட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு திரும்பினார். தொடர்ந்து அவர் ரெஸ்ட் எடுக்கவில்லை. மாறாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அனுஷ்கா சர்மா அறிவிப்பு
அதற்கு முன்னதாகவே தாங்கள் இருவரும் கொரோனா பாதித்தவர்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபட உள்ளதாக அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா அறிவித்திருந்தார். இதையொட்டி விராட் கோலி வீடு திரும்பியதும் இருவரும் கொரோனா பாதித்தவர்களுக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
ரூ. 2 கோடி நிதியுதவி
கெட்டோ பண்ட் மூலம் இருவரும் கொரோனா பாதித்தவர்களுக்கு நிதி திரட்டி 2 கோடி ரூபாயை தற்போது நன்கொடையாக அளித்துள்ளனர். கடந்த முதல் கொரோனா அலையின் போது இருவரும் இணைந்து 3 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்திருந்தனர்.
சமூக பணிகளில் சிறப்பு
தற்போது பிரபலமாக உள்ள க்ரௌட்பண்டிங் மூலம் இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா பாதித்தவர்களுக்கு மேலும் நிதி திரட்டும் பணிகளில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் சிறப்பான சாதனைகளை மேற்கொண்டுவரும் விராட் கோலி, பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.