அகமதாபாத் : இந்தியா -இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
இதையடுத்து இந்த இறுதிப்போட்டி குறித்து கே.எல் ராகுல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணியின் இலக்கு குறித்தும் அவர் மனம் திறந்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வரும் ஜூன் மாதம் லார்ட்சில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை மனதில் வைத்து டெஸ்ட் போட்டிகளில் விட்டுக் கொடுக்காமல் இந்திய அணி விளையாடியதாக கேஎல் ராகுல் பாராட்டு தெரிவித்துள்ளார். பிசிசிஐ ஆப்பிற்காக பேசிய ராகுல், கேப்டன் விராட் கோலி மற்றும் முழு இந்திய அணியின் இலக்காக இதுமட்டுமே இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.