கோலி படை
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் ஆக., 4ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அடுத்த மாதம் 2ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. இந்த அணியில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 4 மாற்று வீரர்கள் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடப்பது இதுவே முதன் முறை. அதில், ஃபைனல் வரை இந்தியா முன்னேறி இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இப்போட்டிக்கு பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், அஜின்க்யா ரஹானே (துணைகேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ஐஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். லோகேஷ் ராகுல், ரிதிமான் சஹா ஆகியோர் உடற்தகுதியை பொறுத்து இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று பிசிசிஐ தெரிவித்தது. ஆனால், சஹாவுக்கு மீண்டும் இரண்டாவது முறையாக கொரோனா பாஸிட்டிவ் உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவர் அணியில் இடம் பெறுவது பெரும் சந்தேகமே.
கேம் சேஞ்சர்
இந்த நிலையில், முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர், ஹிந்துஸ்தாஸ் டைம்ஸ் எழுதியுள்ள கட்டுரையில், "புஜாரா மீண்டும் இந்தியாவின் துணிச்சலான சிப்பாயாக இருப்பார், எதிரிகளைத் தடுத்து வைப்பதில் முக்கிய பங்காற்றுவார். கேப்டன் விராட் கோலி, பேட் மூலம் இந்தியாவின் கேம் சேஞ்சராக இருக்கும் அதே சூழலில், நிலைமை கையை மீறிச் சென்றால், புஜாரா இந்தியாவின் 'வாரண்டி'யாக இருக்கிறார்.
ரிஷப் நம்பர்.2
டெஸ்ட் போட்டிகள் எப்போதும் புஜாராவிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வரும், எனவே வேறு எதையும் எதிர்பார்க்க எந்த காரணமும் இல்லை. விராட் கூட கடந்த ஆண்டு நியூசிலாந்தின் மெதுவான, அதே சமயம் வேகமான பந்துவீச்சு நிலைமைகளை பெரிதாக அனுபவிக்கவில்லை. ஆனால் இங்கிலாந்து தொடர் அவருக்கு சிறப்பானதாக அமையும். இப்போதுள்ள ஃபார்மை வைத்து பார்த்தோமெனில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் கேம் சேஞ்சராக கோலியும், 2வது கேம் சேஞ்சராக ரிஷப் பண்ட்டும் இருப்பார்கள்.
பெரும் அச்சுறுத்தல்
டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்யும் நம்பர்.6. இந்தியாவின் முதல் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிறகு, ஆட்டம் நம் வசம் என்று நியூசிலாந்து நினைத்தால், அது அவர்களின் மாபெரும் தவறாக உருமாறி, மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். ரிஷப் 6 வது இடத்தில் களமிறங்கி, அந்த டெஸ்ட் போட்டியின் போக்கை மாற்றும் திறன் கொண்டிருக்கிறார். இது எதிரணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். தனது டெஸ்ட் வாழ்க்கையில் இரண்டு முறை இதை அவர் ஏற்கனவே செய்துள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.