புவனேஸ்வர் குமார் காயம்
புவனேஸ்வர் குமார் ஐபிஎல் தொடருக்கு முன் காயத்தில் இருந்து மீண்ட அவர், உலகக்கோப்பையில் மீண்டும் காயம் அடைந்தார். பின் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு திரும்பிய அவர் கடந்த சில மாதங்கள் முன் மீண்டும் காயம் அடைந்தார்.
நீண்ட பயிற்சி
தன் காயத்திற்கு அவர் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் தான் சிகிச்சை மற்றும் உடற்தகுதி பயிற்சிகள் மேற்கொண்டார். நீண்ட பயிற்சிகள் மற்றும் பரிசோதனைகளுக்குப் பின் அவர் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்றார்.
குடலிறக்கம்
டி20 தொடரின் முடிவில் மீண்டும் வலியில் சிக்கினார் புவனேஸ்வர். இந்த முறை அவருக்கு குடலிறக்கம் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. பல முறை ஸ்கேன் செய்தும் அவருக்கு இருக்கும் பிரச்சனையை தேசிய கிரிக்கெட் அகாடமி எப்படி கண்டுபிடிக்காமல் இருந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தீபக் சாஹர் காயம்
அதே போல. தீபக் சாஹர் சில மாதங்கள் முன்பு முதுகில் ஏற்பட்ட உள்காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். மீண்டும் கிரிக்கெட் ஆடி வந்த அவர், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் தன் காயத்தை பெரிதாக்கிக் கொண்டார்.
தேசிய கிரிக்கெட் அகாடமி
இதனால் தேசிய கிரிக்கெட் அகாடமி மீது அதிருப்தி பெருகி வருகிறது. அங்கே சரியான சிகிச்சை மற்றும் உடற்தகுதி பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
மீண்டு வந்த பும்ரா
பும்ராவும் கடந்த மூன்று மாதங்களாக காயத்தில் இருந்த போதும், அவர் தானாகவே சிகிச்சை மற்றும் உடற்தகுதி பயிற்சிகளை மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்து கொண்டார். தேசிய கிரிக்கெட் அகாடமியை நாடாமல் தாமாகவே காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
ஹர்திக் பண்டியா நிலை
ஹர்திக் பண்டியா தேசிய கிரிக்கெட் அகாடமியின் உதவியை நாடாமல் தாமாகவே காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். பும்ரா, பண்டியா இல்லாமல் இந்திய அணி வேகப் பந்துவீச்சை மற்ற வீரர்களை வைத்து சமாளித்து வந்தது.
கடுப்பில் இருக்கும் கோலி
தற்போது பும்ரா மீண்டு வந்த நிலையில், புவனேஸ்வர் குமார் மற்றும் தீபக் சாஹர் அடுத்த மூன்று, நான்கு மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பதை அறிந்து கோபத்தில் இருக்கிறார் கேப்டன் கோலி.
முக்கிய தொடர்கள்
இந்தியா அடுத்து தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதில் முக்கியமான தொடர்களாக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் அமைந்துள்ளது.
பிசிசிஐயில் பேசப்பட்ட விவகாரம்
இப்படி முக்கிய தொடர்கள் வரிசை கட்டும் போது சிறப்பான ஸ்விங் செய்து பந்து வீசி வரும் புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர் காயத்தில் சிக்கியது இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தேசிய கிரிக்கெட் அகாடமி மீதான அதிருப்தி பற்றி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பிசிசிஐ செயலாளரிடம் பேசி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.