109 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச அளவில் உயிரிழப்பு ஏறக்குறைய 70,000ஐ நெருங்கியுள்ளது. 12,00,000ற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் 109 பேர் கொரோனாவிற்கு தங்களது உயிரை இழந்துள்ளனர். மேலும் 4289 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரதமரின் கோரிக்கை
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும்வகையில் கடந்த 24ம் தேதியிலிருந்து நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த நேரத்தில் மக்கள் அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்து வருகிறார்.
நாடு தழுவிய பாராட்டு
இந்நிலையில், இந்த நெருக்கடி நேரத்தில் சிறப்பாக பணியாற்றிவரும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அவர்களின் செயல்பாடுகளை மெச்சும்வகையில், நேற்றிரவு 9 மணியளவில் 9 நிமிடங்கள் வீட்டின் விளக்குகளை அமர்த்திவிட்டு வாசலில் விளக்கேற்ற மோடி கேட்டுக் கொண்டிருந்தார்.
விளக்கேற்றிய விராட், அனுஷ்கா
மோடியின் இந்த கோரிக்கையை செவிமடுத்து, கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகையும் அவரது மனைவியுமான அனுஷ்கா சர்மா ஆகியோர் தங்களது வீடுகளில் விளக்கேற்றினர். அனைவரும் ஒற்றுமையுடன் செய்யும் பிரார்த்தனைக்கு வலிமை அதிகம் என்று விராட் கோலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
|
அனுஷ்கா சர்மா டிவீட்
இதனிடையே, தான் நீண்ட நெடுங்காலமாக விளக்கேற்றி வருவதாகவும், கஷ்டப்படுபவர்களின் நலனுக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருவதாகவும் அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் தன்னலம் பார்க்காமல் உழைத்துவரும் அனைத்து பணியாளர்களுக்கும் அவர்களது பாதுகாப்பிற்காக கூடுதலாக பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.