நிதியுதவி திட்டம்
விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா ஷர்மா இணைந்து கொரோனா நிதியுதவி உதவி திரட்ட 'கெட்டோ' என்ற திட்ட பெயரில் சமூக வலைதளம் ஒன்றை உருவாக்கினர். அவர்கள், அதில் முதல் ஆளாக ரூ.2 கோடி நிதியுதவியும் செய்து வியக்கவைத்தனர்.
7 நாட்கள் தான்
மே 7ம் தேதி தொடங்கப்பட்ட அந்த வலைதளம் 7 நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும் என தெரிவித்த விராட் கோலி, அதற்குள்ளாக ரூ.7 கோடி திரட்ட வேண்டும் இலக்கு நிர்ணயித்தார். மேலும் அந்த வலைதளத்தை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்திருந்தார்.
மாபெரும் வெற்றி
இந்நிலையில் இன்றோடு கோலி தெரிவித்த 7 நாட்கள் முடிவடைகிறது. அந்த வலைதளத்தில் சுமார் 11.39 கோடி ரூபாய் ( ரூ. 11, 39,11, 820) நிதி சேர்ந்துள்ளது. ரூ.7 கோடி இலக்காக நிர்ணயித்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கூடுதலாக ரூ. 4.39 கோடி நிதி சேர்ந்துள்ளது. இந்த பணமானது, நேரடியாக ஏசிடி கிராண்ட்ஸ் என்ற அமைப்புக்கு சென்று நாடு முழுவதும் ஆக்சிஜன் உதவிகளை ஏற்படுத்தவுள்ளது.
நெகிழ்ந்த கோலி
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விராட் கோலி, நாங்கள் நிர்ணயித்த இலக்கை 2 மடங்காக அடைய வைத்துள்ளீர்கள். எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த தற்போது வார்த்தைகளே இல்லை. நாங்கள் எடுத்த முயற்சியில் நன்கொடை அளித்தும், அதனை பகிர்ந்தும் உதவி செய்த அனைவருக்கு மிகப்பெரிய நன்றிகள். இந்த கடினமான நேரத்தை நாம் ஒன்றிணைந்து கடந்து செல்வோம் என தெரிவித்துள்ளார்.