அன்னாசி பழத்தில் வெடிமருந்து
கேரளாவில் கடந்த 27ம் தேதி பாலக்காட்டின் மலப்புரம் சைலண்ட் பள்ளத்தாக்கில் இருந்து 15 வயதான கர்ப்பிணி யானை ஒன்று காட்டை விட்டு வெளியேறி அருகில் இருந்த கிராமத்தில் உணவு தேடி சென்றது. இதையடுத்து அந்த கிராம மக்கள் அச்சத்தில், அந்த யானைக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்துகளை நிரப்பி கொடுத்துள்ளனர். வாயில் வெடிப்பொருட்கள் வெடித்ததையடுத்து அங்கும் இங்கும் அலைமோதிய அந்த யானை இறுதியில் ஆற்றில் நின்றபடியே உயிரிழந்துள்ளது.
இத்தகைய விஷயங்களுக்கு முடிவு
இந்நிலையில் கேரளாவில் நடைபெற்ற இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக கேப்டன் விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கர்ப்பிணி யானை மற்றும் வயிற்றில் உள்ள அதன் குட்டியுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ள விராட் கோலி, இத்தகைய சம்பவங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில், அனுஷ்கா சர்மாவும் இந்த சம்பவத்தில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
கிரிக்கெட் பிரபலங்கள் கோரிக்கை
இந்த சம்பவத்திற்கு சுரேஷ் ரெய்னா, ரிஷப் பந்த், குல்தீப் யாதவ் போன்ற கிரிக்கெட் வீரர்களும் தங்களது கண்டனங்களை புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளனர். சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ள புகைப்படம் மனதை தொடுவதாக இருந்தது. இந்த சம்பவத்தில் கேரள முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாக்ஷி தோனி கண்ணீர்
இதனிடையே, கால்பந்தாட்ட அணியின் கேப்டன் சுனில் சேத்ரியும் தன்னுடைய கண்டனத்தை தனது டிவிட்டர் பக்கத்தின்மூலம் பதிவு செய்துள்ளார். இயற்கையை தொடர்ந்து அழித்து வருகிறோம் என்றும் அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனிடையே முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் மனைவி சாக்ஷி தோனியும், இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவை வெளியிட்டு தன்னுடைய கண்ணீரை அடக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.