சர்வதேச அளவில் சிறப்பு
கேப்டன் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாகவும் தனிப்பட்ட முறையிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஒருநாள் போட்டிகளில் சர்வதேச அளவில் முதலிடத்திலும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இடத்திலும் அவர் உள்ளார். இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 7,240 ரன்களை குவித்துள்ளார். மேலும் 27 சதங்களையும் சராசரியாக 53.62ஐயும் பெற்றுள்ளார்.
டி20 போட்டிகளில் முதலிடம்
இதேபோல பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் சர்வதேச டி20 போட்டிகளின் தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளார்.மேலும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 50 சராசரிகளையும் டெஸ்ட் போட்டிகளில் 45 சராசரியும் பெற்றுள்ள அசாம், கடந்த இரு ஆண்டுகளாக இந்திய கேப்டன் விராட் கோலிக்கு இணையாக பேசப்பட்டு வருகிறார்.
சச்சினை நினைவு படுத்துகின்றனர்
இந்நிலையில், விராட் கோலி மற்றும் பாபர் அசாம் இருவரும் இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை தனக்கு நினைவு படுத்துவதாக முன்னாள் மேற்கிந்திய தீவுகளின் பௌலர் இயான் பிஷப் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜிம்பாப்வே பௌலர் பொம்மி ம்பாங்வாவுடன் மேற்கொண்ட இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டியில் பேசிய பிஷப், இருவரும் சச்சினை போலவே ஸ்ட்ரெய்ட் லைனில் சிறப்பாக விளையாடுவதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
தலைமுறையின் சிறப்பான பௌலர்
தொடர்ந்து பேசிய அவர், தற்போதுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்த தலைமுறையின் சிறப்பான பௌலராக, அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக இந்திய பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா விளையாடுவதாக தெரிவித்துள்ளார். இதேபோல காகிசோ ரபடாவும் மிகச்சிறப்பாக விளையாடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.