கோஹ்லி தொடர் நாயகன்
டி20 உலகக் கோப்பைத் தொடரில் தொடர் நாயகனாக விராத் கோஹ்லி அறிவிக்கப்பட்டார். இந்திய அணியின் துணை கேப்டனான கோஹ்லி இந்தத் தொடரில் அட்டகாசமாக ஆடி வந்தார்.
கோஹ்லிக்குப் பதில் தாக்கூர்
நேற்று விருது அறிவிக்கப்பட்டபோது அதை வாங்க கோஹ்ரி மைதானத்தில் இல்லை. அவருக்குப் பதில் பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் விருதைப் பெற்றுக் கொண்டார்.
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக பிரமாத ஆட்டம்
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் இந்தியா 192 ரன்களைக் குவித்தது. அதில் பாதி கோஹ்லி எடுத்த ரன்களாகும். அதாவது 89 ரன்களை அவர் விளாசினார்.
273 ரன்கள்
இந்தத் தொடரில் கோஹ்லி 5 இன்னிங்ஸ்களில் 273 ரன்களைக் குவித்தார். அவரது சராசரி 136 ஆக இருந்தது. ஸ்டிரைக் ரேட் 147 ஆக இருந்தது. ரன் குவிப்பில் 2வது வீரராக கோஹ்லி விளங்கினார்.
தமிம் இக்பால் முதலிடம்
வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 295 ரன்களுடன் ரன் குவிப்பில் முதலிடத்தைப் பெற்றார். இவரை விட கோஹ்லியால் அதிக ரன்களைக் குவித்திருக்க முடியும். ஆனால் கோஹ்லிக்கு ஒரு போட்டியில் பேட் செய்யும் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் அவரால் அதிக ரன்களைக் குவிக்க முடியவில்லை.
ரொம்ப சந்தோஷம்
தான் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டதற்கு கோஹ்லி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், நேரில் வந்து வாங்க முடியாமல் போனது பெரும் ஏமாற்றமாக உள்ளது மேலும் உள்ளூரில் நடந்த இறுதிப் போட்டியை நேரில் பார்க்க முடியாமல் போனதும் வருத்தம் தெரிகிறது. என்னை தொடர் நாயகனாக தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சிறப்பான அனுபவம்
ஒரு அணியாக அனைவருக்கும் இந்தத் தொடர் மூலம் நல்ல அனுபவம் கிடைத்தது. உள்ளூர் ரசிகர்களின் அன்பும், ஆதரவும் மறக்க முடியாதது. இந்தியா இந்தத் தொடரை சிறப்பாக நடத்தியது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.
வாழ்த்துகள்
சாம்பியன் ஆகியுள்ள மேற்கு இந்தியத் தீவுகளின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கோஹ்லி.
2வது முறை
கோஹ்லி டி20 உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ந்து 2வது முறையாக தொடர நாயகன் விருதை வாங்கியுள்ளார். கடந்த 2014 தொடரிலும் கூட அவரே தொடர நாயகனாக தேர்வானார் என்பது நினைவிருக்கலாம். அந்தத் தொடரில் அவர் 319 ரன்களைக் குவித்தார். இந்தியாவும் இறுதிப் போட்டி வரை போய் தோல்வியுற்றது.