சௌதாப்ம்டன்: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று புதிய சாதனையை படைத்துள்ளார். டெஸ்ட் கேப்டனாக குறைந்த போட்டிகளில் 4000 ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். இது மட்டுமில்லாமல் மேலும் பல சாதனைகளையும் படைத்துள்ளார்.
நேற்று இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் கோலி 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும், அவர் சரியாக 58 ரன்கள் அடித்த போது, டெஸ்ட் கேப்டனாக 4000 ரன்கள் குவித்து இருந்தார்.
ஏற்கனவே, இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் கோலி தான் இருக்கிறார். கோலி கேப்டனாக, 39 போட்டிகளில், 65 இன்னிங்க்ஸ்களில் ஆடி 4000 ரன்கள் எடுத்து இருக்கிறார்.
இந்திய கேப்டன்கள் வரிசையில், இவருக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் தோனியும் (கேப்டனாக 3454 ரன்கள்), மூன்றாம் இடத்தில் கவாஸ்கரும் (கேப்டனாக 3449 ரன்கள்) இருக்கின்றனர்.
மேலும், உலகளவில் பிரையன் லாரா தான் டெஸ்ட் கேப்டனாக குறைந்த போட்டிகளில் 4000 ரன்கள் அடித்து இருந்தார். அந்த சாதனையையும் முறியடித்துள்ளார் கோலி. லாரா 40 போட்டிகளில், 71 இன்னிங்க்ஸ்களில் 4000 ரன்களை எடுத்து இருந்தார். மேலும், குறைந்த வயதில் இந்த சாதனையை செய்த கேப்டன் என்ற பெருமையும் கிடைத்துள்ளது.
நேற்று இந்தியா, இங்கிலாந்துக்கு எதிராக 4வது டெஸ்டில் தோல்வி அடைந்து, தொடரையும் இழந்தது. அந்த சோகத்துக்கு இடையே, ஒரு ஆறுதலாக கோலியின் இந்த சாதனைகள் அமைந்துள்ளன. இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த வீரரும் கோலி தான். 4 போட்டிகளில், 544 ரன்கள் குவித்து, ஆவரேஜ் 68 வைத்து இருக்கிறார்.