இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டி
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன 2வது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசியது. தென்னாப்பிரிக்கா 149 ரன்கள் குவித்தது. அடுத்து இந்திய அணி சேஸிங் செய்தது.
ரோஹித் சொதப்பல்
துவக்க வீரரும், டி20 கிங்-குமான ரோஹித் சர்மா 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், தவான், கோலி கை கொடுத்தனர். ஷிகர் தவான் 31 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.
கோலி அரைசதம்
விராட் கோலி அரைசதம் கடந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். 52 பந்துகளில் 72 ரன்கள் குவித்து இருந்தார் விராட் கோலி.
அதிக ரன்கள் எடுத்த வீரர்
இதன் மூலம், டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ரோஹித் சர்மாவை முந்தினார். தற்போது கோலி 71 டி20 போட்டிகளில், 66 இன்னிங்க்ஸ்களில் 2,441 ரன்கள் குவித்து முதல் இடத்தில் இருக்கிறார்.
ரோஹித் இரண்டாம் இடம்
ரோஹித் சர்மா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். அவர் 97 டி20 போட்டிகளில் 89 இன்னிங்க்ஸ்களில் 2,434 ரன்கள் குவித்துள்ளார். கோலியை விட 7 ரன்கள் பின்தங்கி இருக்கிறார்.
குறைந்த இன்னிங்க்ஸ்கள்
ரோஹித் சர்மாவை விட மிகவும் குறைந்த இன்னிங்க்ஸ்களிலேயே அதிக ரன்கள் குவித்துள்ளார் கோலி. அந்த விதத்தில் கோலி எப்போதுமே முதல் இடத்தில் தான் இருக்கிறார். கோலியின் டி20 போட்டிகள் சராசரி 50 என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக 50+ ஸ்கோர்
மேலும், அரைசதம் அடித்த கோலி, டி20 போட்டிகளில் அதிக 50+ ஸ்கோர் அடித்தவர்கள் பட்டியலிலும் தனியாக முதல் இடத்தை பிடித்தார். முன்னதாக ரோஹித் சர்மா, கோலி இருவரும் 21, 50+ ஸ்கோர் அடித்து முதல் இடத்தை பகிர்ந்து கொண்டு இருந்தனர்.
சதம் இல்லை
ரோஹித் அடித்த 50+ ஸ்கோர்களில் 4 சதம், 17 அரைசதம் அடங்கும். ஆனால், விராட் கோலி ஒரு டி20 சதம் கூட இதுவரை அடிக்கவில்லை. அவர் 21 அரைசதம் அடித்து முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரது அதிகபட்ச ரன் 90* மட்டுமே.
மீண்டும் ரோஹித் முந்துவார்
கோலியின் இந்த சாதனைகள் நீண்ட நாட்கள் நீடிக்காது. இதே தென்னாப்பிரிக்க தொடரிலேயே ரோஹித் சர்மா, கோலியை முந்துவார் என கருதப்படுகிறது. இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் இடத்தை பிடிக்க போட்டி போடுவது இந்திய அணிக்கு சாதகமான சூழ்நிலை தான்.