ரசிகர்களை கவர்ந்த ஜோடி
விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதி இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக விளங்கி வருகின்றனர். இவர்களின் டிவீட் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு எனவே தனியாக லட்சக்கணக்கான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்திய அளவில் ஆதர்ச தம்பதியாகவும் இவர்கள் காணப்படுகின்றனர்.
அனுஷ்காவை புகழ்ந்த விராட்
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள விராட் கோலி, பௌலர் ரவிசந்திரன் அஸ்வினுடன் மேற்கொண்ட இன்ஸ்டாகிராம் நேரலையில், தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மா குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் மிகுந்த தைரியசாலி என்றும் இந்த தைரியமே நடிகை மற்றும் தயாரிப்பாளர் என வெற்றிகரமாக அவர் நடைபோட காரணமாக உள்ளதாகவும் கோலி தெரிவித்துள்ளார்.
முழுமையான நம்பிக்கை
நடிகை மற்றும் தயாரிப்பாளராக மிகச்சிறந்த முடிவுகளை அனுஷ்கா சர்மா மேற்கொள்ள அவரது தைரியமே அவருக்கு துணையாக இருப்பதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். தன்னுடைய உள்ளுணர்வு சொல்லும் விஷயங்களை அனுஷ்கா கடைபிடிப்பதாகவும் விராட் கூறியுள்ளார். தான் ஒரு ப்ராஜக்டை எடுத்தால், அதை முழுமையாக நம்பி அவர் செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
வெற்றி நிச்சயம்
ஒரு விஷயம் சரியாகத்தான் நாம் செய்கிறோம் என்ற நம்பிக்கை நமக்கு இருந்தால், அதில் தோல்வியடைய வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ள விராட் கோலி, அனுஷ்கா சர்மாவின் இந்த குணத்தைதான் தான் பின்பற்ற விரும்புவதாகவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இருவரையும் இணைக்கும் பாலம்
எந்த வேலை செய்தாலும் அதில் மிகுந்த திறமையுடன் அனுஷ்கா சர்மா விளங்குவார் என்றும் கைவினை பொருட்கள் செய்வதிலும் அவர் சிறந்தவர் என்றும் விராட் தெரிவித்துள்ளார். மேலும் தான் எதுவும் பேசாமலேயே தன்னுடைய தேவைகளை அவர் புரிந்து வைத்துள்ளதாகவும் தன்னுடைய உடல்மொழியை கொண்டே, தான் போட்டியின்போது எவ்வாறு செயல்படுவேன் என்பதையும் அவர் முன்கூட்டியே கூறிவிடுவார் என்றும் இவையே தங்கள் இருவரையும் இணைப்பதாகவும் விராட் கோலி கூறியுள்ளார்.