லண்டன் : ஐபிஎல் துவக்கத்திலேயே தன்னுடைய சாதனைகளுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி தயாராகிவிட்டதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
2009ல் ஆர்சிபி அணியின் கேப்டனாக கெவின் பீட்டர்சன் இருந்தபோது, இளம்வயதில் புதிதாக இந்திய அணிக்கு வந்த கோலி, அந்த நேரத்தில் தன்னுடைய முதல் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளைக் கூட விளையாடியிருக்கவில்லை.
அந்த நேரத்தில் விராட் கோலிக்கு தேவையான ஆலோசனைகளையும் போட்டிகளின் நெளிவுகளையும் தான் கூறியதாகவும் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய கேப்டன் விராட் கோலி உலகின் சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவராக உள்ளார். ஒவ்வொரு தொடரிலும்கூட ஒரு முந்தைய சாதனையை முறியடிக்கும்வகையில் செயல்பட்டு வருகிறார் கோலி. கடந்த சில போட்டிகளில் இவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார்.
கடந்த 2011 முதல் ஆர்சிபி அணியின் கேப்டனாக தொடர்ந்து வரும் கோலி, இதுவரை 5412 ரன்களை குவித்து அதிக ரன்களை குவித்த சாதனையை கைகொண்டுள்ளார். மேலும் ஐபிஎல்லில் விராட் கோலி இதுவரை 5 சதங்களை அடித்துள்ளார். முன்னாள் ஆர்சிபி வீரர் கிறிஸ் கெயில் 6 சதங்களை அடித்துள்ள நிலையில், அவரது சாதனையை முறியடிக்க இன்னும் ஒரு சதமே கோலிக்கு மீதம் உள்ளது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விரைவில் 12,000 ரன்களை குவித்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க இன்னும் 133 ரன்களே மீதமுள்ளது.
யார் கெஞ்சினாலும் கதறினாலும் கவலை இல்லை.. நாங்க போட்டி நடத்துவோம்.. அரசு கடிதத்தை மதிக்காத பிசிசிஐ!
இத்தகைய சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ள விராட் கோலி தன்னுடைய ஐபிஎல்லின் துவக்க காலத்திலேயே இந்த சாதனைகளுக்கு தயாராகிவிட்டதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். கோலிக்கு முன்னதாக கடந்த 2009ல் ஆர்சிபி அணியின் கேப்டனாக வழிநடத்திய பீட்டர்சன், ஐபிஎல்லின் ஆரம்ப நாட்களிலேயே கோலி சாதனைகளை புரிவார் என்று தான் கருதியதாக தெரிவித்துள்ளார்.
இளவயது வீரராக முதன்முதலில் அணிக்கு வந்த அவர் ஆட்டத்தை எதிர்கொண்ட விதம், பல்வேறு கேள்விகளின்மூலம் ஆட்டத்தை புரிந்துகொண்ட திறம் ஆகியவை அவர் அப்போதே சாதனைகளுக்கு தயாராகியதை தனக்கு சுட்டிக் காட்டியதாகவும் பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில் அவருடைய அறியாமையை நீக்கி பல்வேறு ஆலோசனைகளை தான் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.