உலக அளவில் சிறப்பிடம்
சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு வீரர்களின் முந்தைய சாதனைகளை அலேக்காக முறியடித்து வருபவர் விராத் கோலி. இவரின் பல்வேறு சாதனைகள் அவரை அவரது ரசிகர்கள் மேலும் கொண்டாட காரணமாக உள்ளது.
கேப்டனாக ஒளிர்பவர்
இந்திய கேப்டனாக இருந்து அணியின் பல்வேறு வெற்றிகளுக்கும் காரணமாக உள்ள விராத் கோலி, தொடர்ந்து ஐசிசியின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசைப் பட்டியலிலும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
32 ரன்களே பாக்கி
இந்நிலையில் கேப்டனாக இருந்து 5,000 ரன்கள் எடுக்க அவர் இன்னும் 32 ரன்களே அடிக்க வேண்டியுள்ளது. இந்த சாதனையை கொல்கத்தாவில் நடக்கவுள்ள வங்கதேசத்திற்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் அவர் பூர்த்தி செய்வார் என்று அவரது ரசிகர்கள் காத்துள்ளனர்.
தென்னாப்பிரிக்க கேப்டன் ஸ்மித் முதலிடம்
இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் கிரிம் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். 8659 ரன்கள் அடித்து அவர் முதலிடத்தில் உள்ள நிலையில், தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர், ரிக்கி பாண்டிக் 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் கிளிவ் லாய்ட் மற்றும் நியூசிலாந்தின் ஸ்டீவ் பிளமிங் 4வது மற்றும் 5வது இடத்தில் உள்ள நிலையில், தற்போது கோலி 32 ரன்கள் எடுத்தால் அடுத்த இடத்தை அடையலாம்.
முதல் முறையாக பகலிரவு டெஸ்ட்
இந்தியாவில் பிசிசிஐ தலைவர் கங்குலியின் முயற்சியின் விளைவாக முதல்முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டி கோலி தலைமையில் நடைபெறவுள்ள நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் கோலி 32 ரன்களை அடித்து இந்த சாதனையை எட்டினால், அதுவும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த போட்டியில் மற்றொரு சாதனையாக விளங்கும்.