நொந்து போன கோலி
தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கு முன் பேட்டி அளிக்க வந்த கேப்டன் கோலி, தன்னால் வதந்தி கிளம்பிய விவகாரம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு மிகவும் நொந்து போய் பதில் அளித்தார். அப்படி கோலி நொந்து போகும் அளவுக்கு என்ன நடந்தது?
நினைவுகளை பகிர்ந்தார் கோலி
செப்டம்பர் 12 அன்று காலையில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் விராட் கோலி ஒரு போட்டியை குறித்த நினைவுகளை பகிர்ந்தார். 2016 டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும் என்ற நிலையில், தோனியுடன் இணைந்து அணியை வெற்றி பெற வைத்தார் கோலி.
|
மறக்கவே முடியாத இரவு
அந்தப் போட்டியின் போது தோனி இரண்டு, இரண்டு சிங்கிள் ரன்களாக ஓடியே ரன் சேர்த்தார். அதைக் குறிப்பிட்ட கோலி, "இந்தப் போட்டியை என்னால் மறக்கவே முடியாது. ஸ்பெஷல் இரவு. இந்த மனிதர் என்னை உடற்தகுதி தேர்வுக்கு ஓட வைப்பது போல ஓட வைத்தார்" என குறிப்பிட்டு தோனியை புகழ்ந்து இருந்தார்.
|
விஷமிகள் வேலை
அதைக் கண்ட சில தோனி ரசிகர்கள், கோலி ஏன் திடீர் என தோனி பற்றி பேசுகிறார். தோனி ஓய்வு பெறப் போகிறாரா? என கேள்வி எழுப்பினர். அடுத்து சில விஷமிகள், தோனி ஏழு மணிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்றார்கள்.
வதந்தி பரவியது
அந்த நாள் முழுவதும் இந்த தகவல் தோனி ரசிகர்கள் இடையே பரவியது. சமூக வலைதளங்கள் அவர்கள் கையில் சிக்கியது. சிலர் தோனி ஓய்வு பெறக் கூடாது என பொங்கினர். சிலர் கண்ணீர் விட்டனர். சிலர் தோனி செய்த சாதனைகளை பட்டியல் போடத் துவங்கினர்.
வதந்திக்கு முற்றுப் புள்ளி
ஏழு மணிக்கு தோனி என்ன சொல்லப் போகிறார் என அனைவரும் ஆவலாக இருக்க, ஆறு மணிக்கு தோனியின் மனைவி ஒரு ட்வீட் போட்டார். அதில் "இதை வதந்தி என்பார்கள்" என்று குறிப்பிட்டு இருந்தார். அத்துடன் அந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
கோலியிடம் கேள்வி
ஒரே ஒரு கோலியின் பதிவு இத்தனை வேலைகளை செய்தது. இது பற்றி கோலியிடம் கேட்ட போது தான் நொந்து போய் பேசினார். அந்தப் பதிவை என்ன நினைத்து பகிர்ந்தீர்கள்? என அவரிடம் கேட்கப்பட்டது.
தற்செயலாக பகிர்ந்தேன்
கோலி அளித்த பதில் "என் மனதில் எதுவுமே இல்லை. என் வீட்டில் அமர்ந்து இருந்தேன். தற்செயலாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்தேன். அது செய்தியாக மாறி விட்டது" என்றார்.
எனக்கு பாடம்
மேலும், "இது எனக்கு பாடம் என நினைக்கிறேன். நான் சிந்திப்பது போல இந்த உலகம் சிந்திக்காது. அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்த போது, என் எட்டாத கற்பனையில் கூட ஒன்றுமே நினைக்கவில்லை." என்று கூறினார் கோலி.
சிறப்பா செஞ்சுட்டீங்கப்பா
கேப்டன் விராட் கோலிக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள் தோனி ரசிகர்கள். இனி தோனி பற்றி யாரும் எந்த பதிவும் போட மாட்டார்கள். நல்லா சிறப்பா செஞ்சுட்டீங்கப்பா!