தொடரை கைப்பற்றிய இந்தியா
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியினர், அந்த அணியுடன் சர்வதேச டி20 தொடர், ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் மோதவுள்ளனர். முதலில் இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடிவரும் நிலையில், கடந்த 24ம் தேதி முதல் நடைபெற்றுவரும் 3 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியாவிடம் தொடரை இழந்த நியூசிலாந்து
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் இரண்டு டி20 போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா அபாரமாக ஆடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஹாமில்டனில் நேற்று நடைபெற்ற 3வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் நியூசிலாந்தில் இந்தியா முதல்முறையாக டி20 தொடரை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது.
ரோகித் சர்மா அதிரடி
ஹாமில்டனில் நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பௌலிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 179 ரன்களில் ஆட்டத்தை முடிவு செய்தது. இதில் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 65 ரன்களும் கேப்டன் விராட் கோலி 38 ரன்களும் அடித்தனர்.
சூப்பர் ஓவரில் அதிரடி
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து ரன்களை அடித்து ஆடினர். போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெறும் என்று அனைவரும் கருதிய நிலையில் கடைசி ஓவரை போட்ட முகமது ஷமி, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை 95 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தார். இதையடுத்து போட்டி மிகுந்த பரபரப்புக்கு உள்ளானது. தொடர் சமன் செய்யப்பட்டதை அடுத்து சூப்பர் ஓவர் அளிக்கப்பட்டது.
அதிரடி காட்டிய ரோகித் சர்மா
சூப்பர் ஓவரில் பந்துவீசிய பும்ரா 17 ரன்களை அள்ளிக் கொடுக்க, இதையடுத்து இந்தியாவின் வெற்றி மீண்டும் கேள்விக்குறியானது. ஆனால் சூப்பர் ஓவரில் களமிறங்கிய இந்திய வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் அதிரடியை காட்டினர். கடைசி இரண்டு பந்துகளில் ரோகித் சர்மா இரண்டு சிக்ஸ்களை விளாச, ஆட்டமும் தொடரும் இந்தியாவின் கைவசம் வந்தது.
விராட் கோலி பேட்டி
வெற்றியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, ஆட்டத்தின் இடையில் ஒரு கட்டத்தில் வெற்றி கைநழுவியதாகவே தான் கருதியதாகவும், ஆனால் முகமது ஷமியின் இறுதி ஓவர் மற்றும் சூப்பர் ஓவரில் ரோகித்தின் ஆட்டம் வெற்றியின் பக்கம் இந்தியாவை அழைத்து சென்றதாகவும் தெரிவித்தார். இவர்கள் இல்லையென்றால் கண்டிப்பாக வெற்றி கைநழுவி இருக்கும் என்றும் கூறினார்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு -கோலி
தொடர்ந்து பேசிய கேப்டன் விராட் கோலி, தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில், இளம் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நவ்தீப் சைனி போன்றவர்களுக்கு அடுத்த போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், ஆனால் நியூசிலாந்துடனான மற்ற இரண்டு போட்டிகளிலும் வென்று 5 போட்டிகளிலும் வெற்றி பெற இந்திய அணி தீவிரம் காட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.