ஒத்திவைக்கப்பட்ட தொடர்
ஐபிஎல் 2021 தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஐபிஎல் தொடரை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. பரபரப்பான 29 ஆட்டங்களை கண்டுகளித்த ரசிகர்களுக்கு இது ஒருபுறம் ஏமாற்றத்தை அளித்தாலும் மறுபக்கம் கொரோனா ஏற்படுத்தியுள்ள பீதி ஆசுவாசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு வீரர்கள்
ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து அடுத்ததாக வெளிநாட்டு வீரர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இன்று முதல் வீரர்கள் தங்களது நாடுகளுக்கு ஒருவர் பின் ஒருவராக செல்லவுள்ளனர்.
வீடு திரும்பிய விராட்
இதேபோல டெல்லி மற்றும் அகமதாபாத்தில் இருந்த இந்திய வீரர்களும் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். ஆர்சிபி கேப்டன் விராட் கோலியும் மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதன் புகைப்படத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
உதவி செய்ய உள்ள தம்பதி
முன்னதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்ற பணிகளை இருவரும் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு அனுஷ்கா சர்மா தெரிவித்திருந்தார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் இதனை தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் பங்கேற்க கோரிக்கை
இதையடுத்து இதுகுறித்த விவரங்களை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ரசிகர்களும் கொரோனாவிற்கு எதிரான இந்த இயக்கத்தில் பங்கேற்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார். தொடர்ந்து ரசிகர்கள் பாதுகாப்பாக இருக்கவும் வலியுறுத்தியிருந்தார்.