நாளை மறுதினம் துவக்கம்
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, சர்வதேச டி20 தொடர் மற்றும் சர்வதேச ஒருநாள் தொடர்களில் மோதியது. இதில் இரு அணிகளும் தலா ஒரு தொடரை கைகொண்டுள்ள நிலையில், நாளை மறுதினம் இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன.
சொதப்பிய துவக்க வீரர்கள்
இந்தியா -நியூசிலாந்து அணிகள் முதலில் மோதிய சர்வதேச டி20 தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அடுத்தடுத்த தொடர்களில் போட்டியிட முடியாமல் இந்தியா திரும்பியுள்ளார். அவருக்கு பதிலாக சர்வதேச ஒருநாள் தொடரில் மயங்க் அகர்வாலும், டெஸ்ட் தொடரில் சுப்மன் கில்லும் அறிவிக்கப்பட்டிருந்தனர். ஆயினும் ஒருநாள் தொடரில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா சரியான ஆட்டத்தை தரத் தவறினர்.
செய்தியாளர் சந்திப்பு
இந்நிலையில், நாளை மறுதினம் வெல்லிங்டனில் துவங்கவுள்ள டெஸ்ட் தொடரை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, மூத்த வீரர் இஷாந்த் சர்மா தன்னுடைய காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். அவரது அனுபவம் இந்திய அணிக்கு பக்கபலமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விராட் கோலி அறிவிப்பு
நியூசிலாந்திற்கு எதிராக நாளை மறுதினம் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசிய விராட் கோலி, துவக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் விளையாட உள்ளதாகவும் குறிப்பாக தெரிவித்தார். பிரித்வி ஷா தன்னுடைய நடுநிலை ஸ்ரோக் பிளேவை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை என்று கூறிய விராட் கோலி, அணியில் இடம்பெற்றுள்ள இளம்வீரர்கள் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் தங்களுடைய ஆட்டத்தை தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மூத்த வீரர்கள் உற்சாகம்
அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர்கள் பயமின்றி ஆடுவதன்மூலம் அணியின் மற்ற வீரர்களுக்கும் அவர்கள் உத்வேகமாக அமைவதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். இதன்மூலம் எதிரணியை உற்சாகத்துடன் தயக்கமின்றி எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பாக விளையாடும் அகர்வால்
பிரித்வி ஷாவிற்கு சர்வதேச விளையாட்டுகளில் போதிய அனுபவம் இல்லை என்று குறிப்பிட்ட விராட் கோலி, ஆனால் மயங்க் அகர்வால், கடந்த ஆண்டில் பல்வேறு போட்டிகளில் விளையாடி ரன்களை குவித்துள்ளார். அதனால் அவரை அனுபவமற்றவர் என்று கூற முடியாது என்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு என்ன தேவை என்று அவருக்கு தெரியும் என்றும் விராட் கோலி கூறியுள்ளார்.
எந்த பிட்சிலும் விளையாட வேண்டும்
தற்போது அணிக்கு மிக முக்கியமாக சர்வதேச அளவிலான ஸ்பின்னரின் தேவை உள்ளதை குறிப்பிட்ட விராட் கோலி, இதன்மூலம் எந்த பிட்சிலும் விக்கெட்டுகளை எடுப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து புதிய கலவையிலான பௌலிங்கை முயற்சித்து பார்க்க உள்ளதாகவும் விராட் கோலி தெரிவித்தார்.
அணியின் முக்கிய வீரர்கள்
இந்த டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்திற்கு பதிலாக விரித்திமான் சாஹா விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளார். ஹனுமா விஹாரி 6வது இடத்தில் பேட்ஸ்மேனாக களமிறங்கி ஆட உள்ளார். இதேபோல ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி மற்றும் இஷாந்த் சர்மாவுடன் அவருக்கு பௌலிங் போடவும் வாய்ப்பளிக்கப்பட உள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவும் இந்த போட்டியில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.