கடந்த மாதத்தில் ஏலம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான தொடர்கள் நடைபெறவுள்ள நிலையில், அடுத்ததாக ஒன்றிரண்டு மாதங்களில் ஐபிஎல் 2021 தொடர் துவங்கி நடைபெறவுள்ளது. இதற்கான ஏலம் கடந்த மாதத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் அனைத்து அணிகளும் தங்களது தேவையையொட்டி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்தன.
மாக்ஸ்வெல்லை ஏலம் எடுத்த ஆர்சிபி
ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் க்ளென் மாக்ஸ்வெல் கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்நிலையில், அந்த அணியால் அவர் ரிலீஸ் செய்யப்பட்டார். இதையடுத்து இந்த சீசனில் ஆர்சிபி அணி 14.2 கோடி ரூபாய்க்கு அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கும் மேலாக அவர் கடந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடி 106 ரன்களை மட்டுமே அடித்திருந்தார்.
மாக்ஸ்வெல் பாராட்டு
இந்நிலையில் ஆர்சிபி அணிக்காக விராட் கோலியின் தலைமையின் கீழ் விளையாடுவது சிறப்பானது என்று மாக்ஸ்வெல் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட்டின் உச்சத்தில் உள்ள விராட் கோலி டெஸ்ட் மட்டுமின்றி டி20 போட்டிகளிலும் சிற்பபாக விளையாடி பன்முக திறமை வாய்ந்தவராக உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தலைமை பண்பை கற்க விருப்பம்
எந்த போட்டியிலும் தன்னை சிறப்பாக புகுத்தி கொள்பவர் விராட் கோலி என்றும் போட்டிகளில் நீண்ட நேரம் நிலைத்து விளையாடும் திறமை மிக்கவர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். கேப்டனாக நெருக்கடிகளை சிறப்பாக கையாளும் அவருடன் இணைந்து தலைமை பண்பை கற்றுக் கொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.