டெஸ்ட் தொடர்
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும் டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
நாடு திரும்பிய விராட்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதலில் ஆடப்பட்ட பகலிரவு போட்டியில் மட்டும் பங்கேற்று ஆடிய கேப்டன் விராட் கோலி, தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பியுள்ளார். அவரின் இந்த நடவடிக்கை குறித்து சாதகமாகவும் பாதகமாகவும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
பாராட்டிய ரெய்னா
இந்நிலையில் இந்த நேரத்தில் தன்னுடைய மனைவியுடன் இருந்து அவரை சிறப்பாக கவனிக்கும் வகையில் அருமையான நடவடிக்கையை விராட் கோலி மேற்கொண்டுள்ளதாக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார். தன்னுடைய மகள் பிறந்தபோதும் தான் தன்னுடைய மனைவியுடன் இருந்து அவரை கவனித்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
குடும்பம் எப்போதும் இருக்கும்
இன்று நம்முடன் இருக்கும் விளையாட்டு நாளையே இல்லாமலும் போகலாம். ஆனால் நம்முடன் எப்போதும் கூடவே இருப்பது நம்முடைய குடும்பம் தான் என்றும் அதை நாம் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதிக்கு இந்த மாதத்தில் குழந்தை பிறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.