மெல்போர்ன்: ரன்கள் எடுக்காத காரணத்தினால் இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி வெறுப்படைந்துள்ளார் என முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அப்போது உமேஷ் யாதவ் வீசிய பந்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
இதனால் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து டிஆர்எஸ் மூலம் மேல் முறையீடு செய்வது குறித்து எதிர்முனையில் இருந்த ஹேண்ட்ஸ்காம்பிடம் ஆலோசித்தார். அதன்பின் ஓய்வறையில் இருந்து ஆலோசனையை எதிர்பார்த்தார் ஸ்மித். இதற்கு விராத் கோஹ்லி மற்றும் கள நடுவர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மைதானத்திலிருந்து ஸ்மித் வெளியேற்றப்பட்டார்.
மேலும் இது போன்ற கள்ளாட்டத்தை ஆஸ்திரேலியா அணியினர் மூன்று முறை பயன்படுத்தியதாக விராத் கோஹ்லி குற்றம்சாட்டினார். இந்த செயலுக்கு ஸ்மித் மன்னிப்பு கேட்டார். இரு நாட்டு வாரியங்களும் அறிக்கைகள் மூலம் மோதிக் கொண்டன. அதன்பின் இந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய இணையத்தளம் ஒன்றிடம் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கூறியதாவது: இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி சிறப்பாக விளையாடுபவர் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் அவர் சரியாக ரன்கள் குவிக்கவில்லை. இதனால் அவர் வெறுப்படைந்துள்ளார். அதனால் தான் அவர் சமீப காலமாக உணர்ச்சி வசப்பட்டுகொண்டு இருக்கிறார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நான் முழுமையாக பார்த்தேன். அப்போது ஒவ்வொரு வீரரின் விக்கெட் விழும்போது எல்லாம் அவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். இதனால் கேமராக்களும் அவர் மீதே கவனம் செலுத்துகிறது.
ஆஸ்திரேலியா வீரர்களின் விக்கெட் விழும்போதெல்லாம் வழியனுப்பதலுக்குரிய சைகை செய்கிறார். இது நல்லதுக்கு அல்ல. இது போன்ற செயல்களை அவர் நிறுத்திக்கொண்டு கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும். இவ்வாறு மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.