இஸ்லாமாபாத் : சர்வதேச அளவில் தனக்கு மிகவும் பிடித்த வீரர் இந்திய கேப்டன் விராட் கோலிதான் என்று பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்டட் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி உலக அளவில் பல்வேறு நாடுகளில் பல்வேறு போட்டிகளில் விளையாடி வருவதாகவும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முதலிடத்தில் உள்ள அவருடைய நம்பர் அவருடைய தகுதி குறித்து பேசுவதாகவும் மியான்டட் கூறியுள்ளார்.
பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடும் விராட் கோலியின் பேட்டிங்கை பார்ப்பது சுவாரஸ்யமான விஷயம் என்றும் முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் மியான்டட் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார் கேப்டன் விராட் கோலி. இவர் 86 டெஸ்ட் போட்டிகள், 248 ஒருநாள் போட்டிகள், 82 டி20 போட்டிகளில் இதுவரை விளையாடி, முறையே 7240, 11867 மற்றும் 2794 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச அளவில் பலரது விருப்பத்திற்குரிய பேட்ஸ்மேனாக தொடர்ந்து திகழ்ந்து வரும் கோலி, சமீபத்திய நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தவில்லை.
அனைத்து வடிவங்களிலும் 11 போட்டிகளை கொண்ட அந்த சுற்றுப்பயணத்தில் மொத்தமாக 218 ரன்களை மட்டுமே அடித்திருந்தார் கோலி. இது அவரது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் அவரது கேப்டன்ஷிப் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
ஆயினும் எப்போதும் சர்வதேச அளவில் பல முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்களின் விருப்பத்திற்குரிய பேட்ஸ்மேன் என்னும் பெருமையை விராட் கோலி விட்டுக் கொடுப்பதில்லை. அவருடைய பார்மான ஆட்டத்தை காண அனைவரும் விருப்பம் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் தற்போது பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் ஜாவித் மியான்டட் இணைந்துள்ளார்.
விராட் கோலி உலக தரத்திலான கிரிக்கெட் வீரர் என்று தெரிவித்துள்ள ஜாவித் மியான்டட், சர்வதேச ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் அவர் பெற்றுள்ள முதலிடமே இதை வெளிப்படுத்துவதாக கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர் யார் என்று தன்னிடம் கேட்கப்பட்ட போது தான் தன்னுடைய விருப்பத்திற்குரிய விராட் கோலியையே குறிப்பிட்டதாக யூடியூப் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடியதை சுட்டிக் காட்டியுள்ள மியான்டட், நிலையான போட்டியாக அது இல்லாமல் இருந்தாலும், விராட் கோலி சதமடித்ததையும் குறிப்பிட்டுள்ளார். அவர் வேகப்பந்து வீச்சாளர்களை கண்டு அச்சம் கொள்வதாக கூற முடியாது. இதேபோல பௌன்சி பிட்ச்களை கண்டும், ஸ்பின்னர்களை கண்டும் அவர் பயப்படுவதாக கூறவே முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விராட் சிறப்பாக பந்துகளை எதிர்கொள்பவர். அவர் அடித்து ஆடும் ஷாட்களை பாருங்கள், அதை பார்ப்பதற்கு அவ்வளவு இனிமையாக இருக்கும். அவருடைய ஆட்டம் தரமானது என்றும் மியான்டட் கூறியுள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மிக வேகமாக 12 ஆயிரம் ரன்களை அடித்தவர் என்ற பட்டியலில் இடம்பெற விராட் கோலிக்கு இன்னும் 33 ரன்களே தேவைப்படுகிறது. கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இதை அவர் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனாவால் அது சாத்தியப்படாமல் போனது. இந்நிலையில், அடுத்த ஒருநாள் போட்டிக்காக அவரைப் போலவே ரசிகர்களும் காத்திருக்கின்றனர். தொடர்ந்து ராக் பண்ணுங்க ப்ரோ!