லண்டன்: மிடில்செக்ஸ் அணியுடனான பயிற்சி ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லி 71 ரன் விளாசி நம்பிக்கை அளித்தார். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள டோணி தலைமையிலான இந்திய அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதியது. இதில் 1க்கு3 என்ற கணக்கில் பரிதாபமாக தோற்றதால் இந்திய வீரர்கள் கடும் விமர்சனத்துக்கு ஆளாகினர். இந்த நிலையில் அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 25ம்தேதி பிரிஸ்டல் மைதானத்தில் தொடங்க உள்ளது.
இதற்கு பயிற்சி பெறும் வகையில் இந்திய அணி நேற்று மிடில்செக்ஸ் அணியுடன் பயிற்சி ஒருநாள் போட்டியில் மோதியது. டோணிக்கு ஓய்வளிக்கப்பட்டு, கோஹ்லி தலைமையில் இந்தியா களமிறங்கியது. டாசில் வென்ற மிடில்செக்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் இருவரும் இன்னிங்சை தொடங்கினர்.
தவான் 10, ரோகித் 8 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ரகானே 14 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்தியா 13.3 ஓவரில் 52 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது. இந்த நிலையில், கோஹ்லி மற்றும் ராயுடு ஜோடி அதிரடியாக விளையாடி ரன் குவித்தது.
அரை சதத்தை பூர்த்தி செய்த இருவரும் 4வது விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்து அசத்தினர். டெஸ்ட் தொடரில் படுமோசமாக விளையாடிய கோஹ்லி, இந்த போட்டியில் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 71 ரன் எடுத்து (75 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். அம்பாதி ராயுடு 72 ரன் எடுத்து (82 பந்து, 8 பவுண்டரி), மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் பெவிலியன் திரும்பினார்).
பிற வீரர்கள் சோபிக்காததால், இந்தியா 44.2 ஓவரில் 230 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. மிடில்செக்ஸ் பந்துவீச்சில் ஓலி ரேனர் 4, ரவி பட்டேல் 2, ஜேம்ஸ் ஹாரிஸ், குர்ஜித் சாந்து, ஸ்டீவன் பின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 231 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மிடில்செக்ஸ் அணி களமிறங்கியது.
இந்திய வீரர்களின் பந்துவீச்சில் திணறிய மிடில்செக்ஸ் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணி 39.5 ஓவரில் 135 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா 95 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. கரண் ஷர்மா 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.