இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா மோதிய ஐசிசி டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் வாழ்த்துக்களையும், சிலர் கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர்.
|
விராட் கோலி வாழ்த்து
டி20 உலக கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணியின் ஆட்டம் ஆரம்பம் முதலே சிறப்பாக இருந்ததாகவும், இதுகுறித்து தான் பெருமை படுவதாகவும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். மேலும் முன்பைவிட சிறப்பான விளையாட்டை மகளிர் அணி வெளிப்படுத்துவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த தோல்வி மேலும் வலிமையை கொடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
|
சவுரவ் கங்குலி நம்பிக்கை
இதனிடையே இந்திய மகளிருக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தாலும் மகளிர் அணி, இந்த தொடரில் சிறப்பாக விளையாடியது என்று கூறியுள்ள கங்குலி, ஒருநாள் நாம் கோப்பையை வெல்வோம் என்றும் கூறியுள்ளார்.
|
கோப்பை வரும்... போகும்
பெண்கள் உலக கோப்பை தொடரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ள முன்னாள் ஆட்டக்காரர் கவுதம் கம்பீர், கோப்பை வரும், போகும், ஆனால் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் விளையாடியதன்மூலம் ஒவ்வொரு இந்திய பெண்ணும் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.
|
மயங்க் அகர்வால் வாழ்த்து
இந்த தொடரில் இந்திய மகளிரின் ஆட்டம் மிகுந்த உற்சாகத்தை அளித்ததாக கூறியுள்ள ஜஸ்பிரீத் பும்ரா, அவர்களின் ஆட்டம் பெருமையை தந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதேபோல இந்திய மகளிரின் ஆட்டம் இதயத்தை கொள்ளை கொண்டதாக டெஸ்ட் போட்டிகளின் துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
பிசிசிஐ கருத்து
இதனிடையே, கோப்பையை இந்திய மகளிர் கைநழுவினாலும் தொடர் முழுவதிலும் சிறப்பாக விளையாடியது பெருமை அளிப்பதாக பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதேபோல இந்திய முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் இந்திய மகளிருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.