டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியதால், ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். 8 நாட்கள் மட்டுமே முதலிடத்தில் இருந்துள்ளார் கோஹ்லி
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்டின்போது, 149 மற்றும் 51 ரன்கள் எடுத்ததன் மூலம், ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருந்தார் கோஹ்லி. மேலும் 2011ல் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு, முதலிடத்தைப் பிடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றார்.
இந்த நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த டெஸ்டில் கோஹ்லி 23 மற்றும் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
நேற்று வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங்கில் முதலிடத்தில் இருந்த கோஹ்லி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். 8 நாட்கள் மட்டுமே அவர் முதலிடத்தில் இருந்தார்.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். கடந்த சில மாதங்களாக விளையாடாமலேயே அவர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இதனிடையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன், பந்து வீச்சாளர்களில் முதலிடத்தைப் பிடித்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் 19 புள்ளிகளைப் பெற்றார். இதன் மூலம் 900 புள்ளிகளை முதல் முறையாக தாண்டினார்.
1980ல் இயன் போத்தமுக்குப் பிறகு, 900 புள்ளிகளைத் தாண்டிய முதல் இங்கிலாந்து பவுலரானார் ஆன்டர்சன். தென்னாப்பிரிக்காவின் காஜிசோ ரபாடா ஐசிசி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.