கானல் நீரான கேப்டனின் ஸ்கோர்
ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில், இந்திய அணி 51 ரன்களில் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் 89 ரன்களை அடித்தும் அது கானல் நீரானது.
சிறப்பான ஆட்டத்தை தர தடுமாற்றம்
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்த கேப்டன் விராட் கோலி அதையடுத்து தனது சதத்தை அடிக்க முடியாமல் போராடி வருகிறார். சமீபத்திய ஐபிஎல் மற்றும் தற்போதைய ஒருநாள் தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை தருவதற்கு திணறி வருகிறார்.
3 முறை சதத்தை தவறவிட்ட கோலி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு 11 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். அதில் 3 போட்டிகளில் 80க்கு மேல் ரன்களை குவித்த நிலையில் அவுட்டாகி சதத்தை தவறவிட்டுள்ளார். ஆயினும் இந்த 11 போட்டிகளில் 5 அரைசதங்களை அவர் எடுத்துள்ளார்.
சொற்ப ரன்களே தேவை
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஹாசல்வுட் கைகளால் விராட் கோலி அவுட்டாகியுள்ளார். இதையடுத்து அவர் மிகுந்த கவனத்துடன் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் 12,000 ரன்களை இந்த தொடரில் அவர் பூர்த்தி செய்ய இன்னும் குறைந்த அளவிலான ரன்களே தேவைப்படுகிறது. அடுத்த போட்டியில் அவர் அதை நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.