லன்ச்சுக்கு பிறகு சறுக்கல்
இந்நிலையில், இன்று (ஆக.5) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்பார்த்ததை விட இந்திய அணி மிகச் சிறப்பாக தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களான ரோஹித் - ராகுல் கூட்டணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டத்திலும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். நேர்த்தியாக விளையாடினர். இடையில் 2 ரிவ்யூக்கள் இங்கிலாந்து எடுத்தாலும், அதனால் பலனில்லாமல் போனது. இதனால் ரோஹித் - ராகுல் ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து வெற்றிகரமாக பயணித்தது. தொடர்ந்து சில பந்துகளை இந்த ஜோடி பவுண்டரி விரட்டவும் தவறவில்லை. இதனால், ஸ்கோர் கணிசமாக உயர்ந்து கொண்டே வந்தது. மதிய உணவுக்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், ஓலே ராபின்சன் வீசிய புல் ஷாட்டில் தூக்கி அடித்த ரோஹித், 36 ரன்களில் சாம் கர்ரனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது இந்திய அணி 97 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் மூன்று ரன்கள் எடுத்திருந்தால் இந்த பார்ட்னர்ஷிப்பில் சதம் அடித்திருக்கலாம்.
முதுகெலும்பு
ஆனால், உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணியின் நிலைமை மோசமாகிவிட்டது. ஒன் டவுன் இறங்கிய புஜாரா 4 ரன்களிலும், கேப்டன் கோலி தான் சந்தித்த முதல் பந்திலும் அடுத்தடுத்து அவுட்டானார்கள். இவர்களை இருவரையும் பேக் டூ பேக் வீட்டுக்கு அனுப்பியது ஆண்டர்சன் தான். புஜாரா பேட்டில் உரசிச் சென்ற பந்து, விக்கெட் கீப்பர் பட்லர் கைகளில் அழகாக தஞ்சமடைய, அடுத்த பந்தே, கோலி பேட்டை மீண்டும் உரசிய பந்து, மீண்டும் விக்கெட் பட்லர் கைகளுக்கு சென்றது. இரண்டும் எவ்வளவு பெரிய விக்கெட். அணியின் முதுகெலும்பு விக்கெட்ஸ். ஆனால், சொடக்கு போடும் நேரத்தில் இழந்தது இந்தியா.
Direct Hit
இதற்கு பிறகு அந்தந்த சம்பவம் வேற ரகம். ராபின்சன் ஓவரில், லோகேஷ் ராகுல் பந்தை ஸ்ட்ரைக்கில் நின்று சந்தித்து, லைட்டாக கவர் பாயிண்ட்டில் தட்டிவிட்டு ரன் ஓட ஒரேயொரு அடி எடுத்து வைத்தார். அதற்குள் ரன்னர் எண்டில் இருந்து சிட்டாய் பறந்த ரஹானே நான்கைந்து ஸ்டெப்புகள் முன்னே சென்றுவிட்டார். ராகுல் உடனே வேண்டாம் என்று கதற, ரஹானே மீண்டும் கிரீஸ் திரும்புவதற்குள், பேர்ஸ்டோ பந்தை துல்லியமாக ஸ்டெம்ப்பை நோக்கி வீச "Direct Hit". ரஹானே காலி. இந்தியா 4வது விக்கெட்டை இழந்தது.
தப்பித்த ராகுல்
இதன் பிறகு அடுத்த விக்கெட்டையும் இந்தியா இழந்திருக்க வேண்டியது. ஆம்! ஆண்டர்சன் ஓவரில் 52 ரன்கள் எடுத்திருந்த லோகேஷ் ராகுல் ஸ்லிப்பில் கொடுத்த அற்புதமான கேட்சை டாம் சிப்லே தவறவிட்டார். அதை மட்டும் பிடித்திருந்தால், 5வது விக்கெட்டும் காலியாகியிருக்கும். இப்போது இந்திய அணி மிடில் ஆர்டரை முற்றிலும் இழந்துவிட்டது. அப்படி இப்படி என தாக்குப்பிடித்து ஆடினாலும், 250 ரன்கள் தாண்டினாலே அது பெரிய சாதனையாக அமையும்.
கோலி சாதனை
இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்த முதல் இன்னிங்ஸில் களமிறங்கி, மீண்டும் பெவிலியன் திரும்பிய சில நிமிடங்களுக்கு கேப்டன் விராட் கோலி சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார். அதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் அதிக "ஜீரோ" எடுத்த கேப்டன் என்ற பெயரை கோலி பெற்றிருக்கிறார். கேப்டனாக இதுவரை அவர் டெஸ்ட் போட்டிகளில் 9 முறை டக் அவுட் ஆகியிருக்கிறார். இந்த பட்டியலில் தோனி 8 டக் அவுட்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.