சிறப்பான தீர்மானம்
இந்த 2020 ஆண்டு முடிவடைய ஒரு மாதத்திற்கும் குறைவான காலகட்டமே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீர்மானங்களுடன் துவக்கும் நாம், அதில் ஒரு சிலவற்றையாவது முடிக்க முயற்சிப்போம். அதில் வெற்றியும் கிடைத்துவிடும். ஆனால் இந்த ஆண்டு நம் அனைவருக்கும் ஒரு சிறப்பான தீர்மானத்தை கொரோனா கொடுத்துவிட்டது.
ஆய்வு நடத்திய யாஹூ
அது நம்மை, நம் உடல்நலத்தை காப்பற்றுவதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே. ஆயினும் இந்த காலகட்டத்திலும் மக்களின் தேடல் வேறு வகையாகவும் இருந்தது என்பது யாஹூ இணையதளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு இணையத்தில் தேடப்பட்டவர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது யாஹூ.
இடம்பிடித்த விராட், தோனி
அதில் அதிகமாக தேடப்பட்ட 20 பிரபலங்களில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் இந்நாள் கேப்டன் விராட் கோலி இடம் பிடித்துள்ளனர். இவர்கள் எப்போதுமே ரசிகர்களால் அதிகமாக விரும்பப்படுபவர்கள் தான் என்றாலும் இந்த நெருக்கடி நேரத்திலும் இவர்கள் மீது கொண்ட அன்பை ரசிகர்கள் மாற்றிக் கொள்ளவில்லை.
19வது இடம்பிடித்த கோலி
இந்த 20 பிரபலங்களில் 11வது இடத்தை பிடித்துள்ளார் எம்எஸ் தோனி. மாறாக விராட் கோலி 19வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த 2015 முதல் 2019 வரையில் அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் இருவர்தான் என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச போட்டிகளில் ஓய்வு
இந்த ஆண்டு இவர்கள் இருவரது பெயர்களும் அதிகளவில் பல்வேறு விஷயங்களுக்காக அடிபட்டது. முக்கியமாக தன்னுடைய குழந்தை பிறப்பை அறிவித்தார் விராட் கோலி. எம்எஸ் தோனியோ சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.