ஒருநாள் தொடர் நாளை துவக்கம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டி சிட்னியில் நாளை நடைபெறவுள்ளது. இதையடுத்து இந்த தொடரில் பங்கேற்க கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட அணி வீரர்கள் தயாராக உள்ளனர். ஆஸ்திரேலிய அணியும் திருப்பித் தாக்க தயாராக உள்ளது.
133 ரன்களே மீதம்
ஒருநாள் போட்டிகளில் 12,000 ரன்களை பூர்த்தி செய்ய விராட் கோலிக்கு இன்னும் 133 ரன்களே மீதமுள்ள நிலையில், அதை இந்த தொடரில் அவர் எட்டிப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் இந்த சாதனையை செய்யும் 6வது வீரர் என்ற பெருமை கோலிக்கு கிடைக்கும். 300 இன்னிங்ஸ்களுக்குள் இந்த சாதனையை மேற்கொள்ளும் முதல் வீரர் என்ற பெருமைக்கும் அவர் சொந்தக்காரர் ஆக முடியும்.
6 சதங்கள் பாக்கி
மேலும் ஒருநாள் போட்டிகளில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையையும் மேற்கொள்ள விராட் கோலிக்கு இன்னும் 6 சதங்களே மீதமுள்ளன. இதுவரை 248 போட்டிகளில் 43 சதங்களை ஒருநாள் போட்டிகளில் 59.3 சராசரியுடன் விராட் கோலி எட்டியுள்ளார்.
3 போட்டிகளில் விளையாட மாட்டார்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்கவுள்ள கேப்டன் விராட் கோலி, தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி இந்தியா திரும்பவுள்ளார். மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டர் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.