கோலியின் விளக்கம்
தோல்வி குறித்து பேசியிருந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி சில வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தான் இந்தியா தோற்றது என கடும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். தோல்விக்கான காரணம் என்பது குறித்து ஆலோசனை செய்வோம். நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக டெஸ்ட் அணியில் தேவையான மாற்றத்தை கொண்டு வருவோம். எந்தவித அச்சமும் இன்றி சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களை மட்டும் அணியில் சேர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் பந்துவீச்சாளர்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்க முடியாது எனத்தெரிவித்திருந்தார்.
மறைமுக குற்றச்சாட்டு
இந்த விளக்கத்தை வைத்து பார்க்கையில் விராட் கோலி மறைமுகமாக சட்டீஸ்வர் புஜாரா மற்றும் ரோகித் சர்மாவை குறை கூறுகிறார் என தெரிகிறது. முதல் இன்னிங்ஸில் புஜாரா 54 பந்துகளை சந்தித்து 8 ரன்களை மட்டுமே எடுத்தார். அவர் தனது முதல் ரன்னை அடிக்க 35 பந்துகளை எடுத்துக்கொண்டார். அதே போல 2வது இன்னிங்ஸில் 80 பந்துகளை சந்தித்த அவர் 15 ரன்களை மட்டுமே அடித்து ஏமாற்றினார். இதே போல ஓப்பனராக களமிறங்கிய ரோகித் சர்மா நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க திணறியது, பின்னர் வந்த வீரர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கோலியின் ட்வீட்
இந்நிலையில் இத்தனை விமர்சனங்களை கூறிவிட்டு தற்போது விராட் கோலி எதுவுமே நடக்காதது போல ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். இந்திய அணி வீரர்களின் புகைப்படத்தை பதிவுட்டுள்ள அவர், இது வெறும் அணி அல்ல, ஒரு குடுமத்தை போன்றது. நாங்கள் ஒன்றாக இணைந்து வரும் நாட்களில் பயணிப்போம் எனக்கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
இங்கிலாந்து டெஸ்ட்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அடுத்ததாக இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த போட்டி ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் புஜாரா மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.