பழசை நினைச்சா
இதுகுறித்து அவர் கூறுகையில், பழைய பயணத்தை நினைத்துப் பார்ப்பது சுவாரஸ்யமானது. 2014 அடிலைட் போட்டி நிறைய உணர்வுகள் நிரம்பியது. இரு அணிகளுக்குமே அது நிறைய பாடத்தைக் கற்றுக் கொடுத்தது. ரசிகர்களும் அதை மறக்க முடியாது. நாங்கள் நிறையவே கற்றுக் கொண்டோம். பின்னாளில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்க அடிலைட் போட்டியின் தோல்வியும் முக்கியமான படிக்கட்டாகும் என்று தெரிவித்துள்ளார்.
கடும் உழைப்பு அவசியம்
மனதை ஒருமுகப்படுத்தி எதிலும் ஈடுபட்டால், அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால், கடுமையான சூழலிலும் கூட சோர்வடையாமல் உழைத்தால் எதுவுமே சாத்தியம்தான். இதுதான் நாங்கள் கற்றுக் கொண்ட பாடம். இது எப்போதுமே எங்களுடைய மனதில் நிலைத்திருக்கும். எங்களது தொடர் பயணத்தின் உந்து சக்தியாக கூடவே இருக்கும் என்றார் அவர்.
5 சதங்கள்
2014ம் ஆண்டு டிசம்பர் 9 முதல் 13ம் தேதி வரை இந்த முதல் டெஸ்ட் போட்டி அடிலைடில் நடந்தது. இப்போட்டியின் 2வது இன்னிங்ஸில் விராட் கோலி 141 ரன்களை விளாசினார். ஆனாலும் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியை இழந்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில 7 விக்கெட் இழப்புக்கு 517 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஸ்டீவ் ஸ்மித் 162, டேவிட் வார்னர் 145, மைக்கேல் கிளார்க் 128 என அட்டகாசம் செய்திருந்தனர்.
கோலியின் அபாரம்
அடுத்து களம் இறங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 444 ரன்களை எடுத்தது. அதில் விராட் கோலி எடுத்த 115 ரன்களும் அடக்கம். இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் என டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா. அதில் வார்னர் மீண்டும் சதம் அடித்தார். அதன் பிறகு ஆடிய இந்தியாவுக்கு விராட் கோலியே மீண்டும் சதம் அடித்துக் கொடுத்தார். இந்த முறை அவர் வெளுத்தது 141 ரன்கள். ஆனால் மற்றவர்கள் சொதப்பியதால் இந்தியா தோல்வியைத் தழுவியது.