நேரலை நிகழ்ச்சிகளில் வீரர்கள்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 4 மாதங்களாக இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை. வீரர்களும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு கைகொடுப்பது என்னவோ சமூகவலைதளங்கள்தான். ஆயினும் சில நேரலை மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர்.
நினைவுகளை பகிர்ந்த கோலி
கேப்டன் விராட் கோலியும் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது நேரலை மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். இதேபோல சக வீரர் மயங்க் அகர்வாலுடன் அவர் மேற்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.
விக்கெட் கீப்பிங் செய்த கோலி
கடந்த 2015ல் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில், முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட்கீப்பர் தோனி பிரேக் எடுப்பதற்காக, கோலியை சில ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதையடுத்து தான் விக்கெட் கீப்பிங் மற்றும் பீல்டிங் இரண்டையும் செய்ததாகவும் கோலி தெரிவித்துள்ளார்.
அஞ்சிய கேப்டன் கோலி
அதன்பிறகே தோனியின் சுமை தனக்கு தெரியவந்ததாகவும் ஒரே நேரத்தில் தோனி எவ்வாறு நெருக்கடியுடன் விக்கெட் கீப்பிங் மற்றும் பீல்டிங்கை செய்கிறார் என்பது குறித்து அறிந்ததாகவும் கோலி குறிப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில் உமேஷ் யாதவ் பௌலிங் செய்தநிலையில், தான் ஹெல்மட் இல்லாமல் இருந்ததால் பந்து தன்னை தாக்குமோ என்று தான் அஞ்சியதாகவும் கோலி தெரிவித்துள்ளார்.