நியூசிலாந்தில் இந்தியா சுற்றுப்பயணம்
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தொடர்களை வெற்றிகரமாக கைகொண்ட இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இதற்கென இந்திய அணி நியூசிலாந்திற்கு சென்றுள்ளது.
மாற்று வீரர்களாக இளம் வீரர்கள்
கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் காயமடைந்த இந்திய துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் நியூசிலாந்து தொடர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் பிரித்வி ஷா அணியில் இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத தோனி
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வியுற்ற இந்திய அணி, தன்னுடைய உலக கோப்பை கனவை மூட்டை கட்டிவிட்டு இந்தியா திரும்பியது. இந்த போட்டியை அடுத்து முன்னாள் கேப்டன் தோனியும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார்.
நியூசிலாந்தை பழிவாங்குமா?
இந்நிலையில் இந்த தோல்விக்கு தற்போது விளையாடவுள்ள இந்த தொடரில் இந்திய அணி நியூசிலாந்தை பழிதீர்க்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
பயிற்சிகளில் தீவிரம்
நியூசிலாந்திற்கு எதிரான இந்த தொடர்களில் விளையாடுவதற்காக சென்றுள்ள இந்திய அணி வீரர்கள், பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஜிம்மிலும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
|
இளம் வீரர்களுடன் சுவையான உணவு
இந்நிலையில் ஜிம்மில் பயிற்சி மேற்கொண்ட கேப்டன் விராட் கோலி, அதை தொடர்ந்து மணீஷ் பாண்டே, ஜடேஜா மற்றும் கே.எல். ராகுலுடன் நல்ல சுவையான உணவை சாப்பிட்டதாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். கொண்டாட்டமான இந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக்குகளை பெற்றுள்ளது.
|
புகைப்படம் வெளியிட்ட கோலி
முன்னதாக ஆக்லாந்தில் இறங்கியவுடன் ஷர்துல் தாக்கூர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருடன் செல்பி எடுத்த விராட் கோலி, அதனை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
மார்ச் 4 வரை நீடிக்கும் பயணம்
இந்தியா -நியூசிலாந்து இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் ஆக்லாந்தில் துவங்கவுள்ள நிலையில், தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த பயணத்தின் இறுதி போட்டி வரும் மார்ச் 4ம் தேதிவரை நடைபெறவுள்ளது.