ஓய்வில் உள்ள கோலி
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் ஏறக்குறைய அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வீரர்கள் அனைவரும் ஓய்வில் உள்ளனர். இதற்கு விராட் கோலியும் விலக்கல்ல. கொரோனா குறித்து தொடர்ந்து பேசிவரும் விராட் கோலி தற்போது பிரதமர் மோடியின் கொரோனா குறித்த அறிவுறுத்தலுக்கும் குரல் கொடுத்துள்ளார்.
பிரதமர் மோடி உரை
கொரோனா வைரஸ் உலகெங்கிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் ஏறக்குறைய 200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுகுறித்து நாட்டு மக்களிடையே நேற்று மாலை உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் 22ம் தேதி மக்கள் ஊரடங்கில் ஈடுபட கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களிடம் வேண்டுகோள்
இந்நிலையில், பிரதமர் மோடியின் ஆலோசனைகளை மக்கள் சிறப்பாக கடைபிடித்து பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் செயலாற்ற கேப்டன் விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார். பொறுப்பான குடிமக்களாக இந்த அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டியது நமது கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விராட் கோலி கோரிக்கை
இந்த இக்கட்டான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டுவரும் இந்தியா மற்றும் உலக அளவிலான மருத்துவ பணியாளர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். மக்கள் தங்களை சிறப்பாக சுகாதாரத்துடன் பராமரித்து அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார்.
நடைபெறுவதில் சிக்கல்
கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் விளையாட்டுத்துறையே முடங்கியுள்ளது. வீரர்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். கொரோனா பாதிப்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தற்போது இந்தியாவில் ஐபிஎல் தீ பற்றிக் கொண்டிருந்திருக்கும். இன்னும் ஒரு வாரத்தில் ஐபிஎல் துவங்கியிருக்கும். ஆனால் தற்போது ஐபிஎல் நடைபெறுமா என்பதில் சிக்கல் நீடிக்கிறது.