இந்திய அணி வீரர்கள்
இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் கடந்த சில வருடங்களாக சிறப்பான பேட்ஸ்மேன்களாக விளங்கி வருகின்றனர். இவர்கள் இருவருக்குள்ளும் யார் சிறப்பாக விளையாடுவது என்ற போட்டி நிலவுவது ஆட்டங்களின் போது வெளிப்படும். இவர்களது இந்த போட்டியால் ரசிகர்களுக்கு சிறப்பான ஆட்டத்தருணங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.
குமார சங்ககாரா புகழ்ச்சி
இந்நிலையில் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய முன்னாள் இலங்கை கேப்டன் குமார சங்ககாரா இந்திய அணியின் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் நவீன கிரிக்கெட்டின் வலிமையான கூட்டணியாக விளங்குவதாகவும் இந்திய அணியை தங்களது தோள்களில் சுமப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
3 வடிவங்களில் நிலையான ஆட்டம்
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியிடம் சிறப்பான விஷயங்கள் அதிகமாக இருப்பதாக சங்ககாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவர்கள் சிறப்பாக விளங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் 3 வடிவங்களிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதே மற்றவர்களிடம் இருந்து இவர்களை வித்தியாசப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பான வழிகாட்டுதல்
ஆனால் தொடர்ந்து அனைத்து வடிவங்களிலும் விளையாடிவரும் அவர்களுக்கு அதில் நிலைத்தன்மையை கடைப்பிடிப்பது கடினமாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். அவர்கள் இருவரும் மிகுந்த மரியாதைக்கு உரியவர்கள் என்றும் சங்ககாரா தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களுக்கு முந்தைய தலைமுறை வீரர்கள், அவர்களுக்கு சிறப்பான வழிகாட்டிகளாக இருந்துவிட்டு சென்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.