குவாரன்டைனில் இந்திய வீரர்கள்
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையில் வரும் வெள்ளிக்கிழமை துவங்கி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர்கள் நடைபெறவுள்ளன. இதையொட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் குவாரன்டைன் மற்றும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வெற்றிடத்தை ஏற்படுத்தும்
இந்நிலையில் இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாதது மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலியாவின் ஸ்டார் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். சோனி நெட்வொர்க்கிற்காக பேசிய ஸ்மித், குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டின் முதல்தர வீரராக தன்னை ரோகித் சர்மா கடந்த ஆண்டுகளில் அடையாளப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாற்றாக அமைவார்கள்
ஆனால் இந்திய அணியில் மிகவும் திறமைமிக்க வீரர்கள் பலர் உள்ளதாகவும் அவர்கள் ரோகித் மற்றும் விராட் கோலிக்கு மாற்றாக அமைவார்கள் என்றும் ஸ்மித் கூறினார். மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் ரோகித் சர்மாவால் குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெற்றிடத்தை ஏற்படுத்தும்
இதேபோல முதல் பகலிரவு போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பவுள்ள விராட் கோலியும் டெஸ்ட் தொடரில் பெரிய அளவிலான வெற்றிடத்தை ஏற்படுத்துவார் என்று கூறிய ஸ்மித், அவருக்கு மாற்றாகவும் இந்திய அணியில் திறமையான பல வீரர்கள் உள்ளதை சுட்டிக் காட்டினார்.
தீவிரத்துடன் விளையாடுவேன் -ஸ்மித்
கடந்த 2018 -19 இந்தியா -ஆஸ்திரேலியா தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தார் ஸ்மித். அந்த தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில், தற்போது இந்தியாவை தீவிரமாக எதிர்கொள்ள உள்ளதாகவும் எப்போதுமே அனைத்து போட்டிகளையும் மிகுந்த தீவிரத்துடன்தான் விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.