2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆக்லாந்தில் கடந்த 24 மற்றும் நேற்று நடைபெற்ற முதல் இரண்டு சர்வதேச டி20 போட்டிகளில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரு பிரிவுகளிலும் அபாரமாக விளையாடி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து அணி வீரர்கள் திணறினர். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் அபாரம்
இந்தியாவின் சமீபத்து போட்டிகளில் 4வது இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடிவரும் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த இடத்தில் அபாரமாக பொருந்தி தேர்வாளர்களின் நீண்டநாள் கவலைக்கு தீர்வளித்துள்ளார். இவரின் இத்தகைய நிலையான ஆட்டத்தையடுத்து நீண்ட நாட்களாக கேள்விக்குறியாக இருந்த 4வது இடத்திற்கான தற்போது தீர்வு எட்டப்பட்டுள்ளது.
நம்பிக்கை அளிக்கும் ஸ்ரேயாஸ்
நியூசிலாந்திற்கு எதிராக ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அரைசதம் மற்றும் 33 பந்துகளில் 44 ரன்கள் என்ற ஸ்கோரை அடித்து ஸ்ரேயாஸ் ஐயர் கவனத்தை பெற்றுள்ளார். இவரின் இத்தகைய நிலையான ஆட்டத்தால் இவர் ரசிகர்களால் அடுத்த கோலியாக பார்க்கப்படுகிறார். கோலி தன்னுடைய ஆட்டத்தில் நிலைத்தன்மையையும் நிதானத்தையும் தொடர்ந்து கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரேயாஸ் ஐயர் பாராட்டு
நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில், போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அணியில் இளம் வீரர்களுக்கு சிறந்த உதாரணமாக விளங்குவதாக பாராட்டு தெரிவித்தார். அவர்களின் சிறந்த ஆட்டத்தின்மூலம் அவர்கள் உலக அளவில் சிறந்து விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.
"அதிகமாக கற்றுக் கொள்கிறேன்"
எதிரணியை எவ்வாறு எதிர்கொள்வது, எப்படி ஆடுவது என்பது உள்ளிட்ட திட்டங்களுடன் களமிறங்கி சாதிக்கும் திறன் விராட் கோலிக்கு அதிகமாக உள்ளதாகவும், அவரிடம் இருந்து தான் அதிகமாக கற்று கொள்வதாகவும் ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார். தனக்கு மட்டுமின்றி அணியின் அனைத்து வீரர்களுக்கும் இவர்கள் இருவரும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக திகழ்வதாகவும் அவர் மேலும் பாராட்டு தெரிவித்தார்.
"வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்துவார்"
தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை மிகச்சிறப்பாக பயன்படுத்தும் ஆற்றல் மிக்கவர் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா என்று ஸ்ரேயாஸ் ஐயர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் எதிரணியில் சிறப்பாக பந்துவீசும் வீரர்களின் தாக்குதலைகூட தரைமட்டமாக்கும் தனிப்பட்ட திறன் ரோகித் சர்மாகவிற்கு உள்ளதாகவும், இதை தான் உற்று நோக்கி வருவதாகவும் ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.
சிக்சர் அடிப்பது குறித்து ஸ்ரேயாஸ்
போட்டியின்போது ஒவ்வொரு பந்தையும் எதிர்கொண்டு ஒரு ரன்னாவது அடிப்பதில் தான் ஆர்வத்துடன் விளையாடுவதாகவும் ஆனால் சிக்சர் அடிக்கும்போது மிகுந்த கவனத்துடன் பந்தை எதிர்கொண்டு சிக்சர் அடிப்பதற்கான சூழலை உருவாக்கி விளையாடுவதாகவும் ஸ்ரேயாஸ் ஐயர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
ஸ்ரேயாஸ் ஐயர் அறிவுறுத்தல்
எதிரணி பௌலர்களின் திறனை மதிப்பிட்டு அவர்கள் பந்துகளில் முதலில் சாதாரணமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி பிறகு சிறிது நேரத்தை எடுத்துக் கொண்டு அவர்களின் பந்துகளின் தரத்தை ஆய்ந்தறிந்து விளையாடினால், பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் அடிப்பது பெரிய விஷயம் இல்லை என்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.