முதல் டி20
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. இதனையடுத்து இரு அணிகளும் மோதும் டி20 தொடர் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு முன்னர் நடைபெறும் சர்வதேச போட்டி என்பதால் இந்திய அணிக்கு இந்த டி20 தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனவே அதனை மனதில் வைத்து இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியை அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வின்
இந்த டி20 அணியில் நட்சத்திர வீரர் அஸ்வின் பெயர் இடம்பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பலரும் பாராட்டையும் பெற்ற அவருக்கு டி20 அணியில் வாய்ப்பு அளிக்கப்படாதது அனைவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மாறாக அவரின் இடத்திற்கு இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அனுபவ வீரரை விட்டுவிட்டு தற்போது வந்த வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதா என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
காரணம்
இதுகுறித்த கேள்விக்கு நேற்று பதிலளித்த கோலி, இந்த கேள்வியில் ஒரு லாஜிக்கே இல்லை. டி20 போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர் அணிக்காக சிறப்பாக ஆடி வருகிறார். ஒரே திறமை மற்றும் ஸ்டைல் கொண்ட 2 பேரை எப்படி அணியில் சேர்ப்பது. கேள்வி கேட்பது சுலபம். ஆனால் நீங்கள் கூறுவது போல் அஸ்வினை எந்த இடத்திற்கு தேர்வு செய்வீர்கள். அவரின் இடத்தில் ஏற்கனவே சுந்தர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என தெரிவித்துள்ளார்.
வருத்தம்
இதுகுறித்து முன்னர் பேசியிருந்த கம்பீர், அஸ்வின் போன்ற அனுபவ வீரர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக டி20 அணியில் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் தொடர்ந்து அசத்திய வீரரை வைட் பால் கிரிக்கெட்டில் கடந்த 2 வருடமாக சேர்க்கப்படாமல் இருப்பது என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று. அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆட்டத்தின் எந்த பகுதியிலும் உதவக்கூடியவர், என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.