சிராஜ் தந்தை மறைவு
ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடி கவனத்தை பெற்ற ஆர்சிபி வீரர் முகமது சிராஜ், தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார். சிட்னியில் குவாரன்டைன் மற்றும் பயிற்சிப் போட்டிகளில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை அவரது தந்தை முகமது கௌஸ் உடல்நலக்குறைவால் காலமானார்.
தாயின் அறிவுரை
தன்னுடைய தந்தையின் மறைவையொட்டி அவர் நாடு திரும்பவில்லை. மாறாக இந்தியாவிற்காக விளையாட முடிவு செய்து தொடர்ந்து சிட்னியில் உள்ளார். இந்நிலையில், தன்னுடைய தந்தையின் மறைவையொட்டி தான் இந்தியா திரும்புவது குறித்து முடிவு செய்ய முடியாமல் இருந்த நிலையில் தன்னுடைய தாய் கொடுத்த ஆலோசனை தனக்கு தெளிவை கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுளளார்.
நனவாக்க தாய் அறிவுரை
எல்லோரும் ஒருநாள் மறைந்தாக வேண்டும் என்று குறிப்பிட்ட அவரது தாய், அவரது தந்தையின் கனவை முழுமையாக்க தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலேயே இருந்து சிறப்பாக விளையாட அறிவுறுத்தியதாக சிராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய தந்தை மறைந்தாலும் தன்னுடன் எப்போதும் இருப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தேற்றிய விராட் கோலி
மேலும் தன்னுடைய தந்தையின் மறைவால் தான் மனம் உடைந்திருந்த போது தன்னிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, டென்ஷன் இல்லாமல் இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் சிராஜ் தெரிவித்தார். இந்திய அணிக்காக சிராஜ் விளையாடுவதை அவருடைய தந்தை மிகவும் விரும்பியதாகவும் எந்த மனநெருக்கடியும் இல்லாமல் அதை செய்யுமாறு விராட் கூறியதாகவும் சிராஜ் குறிப்பிட்டார்.
விராட் அறிவுறுத்தல்
இந்த நெருக்கடி நேரத்தில் வலிமையாக இருந்தால், அது சிராஜ்க்கு மிகவும் உதவும் என்றும் விராட் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தன்னுடைய இந்த நெருக்கடி சூழலில் தனக்கு ஆதரவாக இருந்த சக வீரர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கெண்டார்.