ரிஷப் பண்ட் சொதப்பல்
டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என இரண்டிலுமே அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன் இந்த சுற்றுப்பயணத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு பெற்றார். அதிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தார். ஆனால் ரிஷப் பண்ட் மோசமாக விளையாடினாலும் வாய்ப்பு தரப்பட்டு வருகிறது. வங்கதேச தொடரிலும் அவர் தான் விளையாடப்போகிறார். இதனால் அவரை நீக்க வேண்டும் என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
ராஜ்குமார் சர்மா பேச்சு
இந்நிலையில் விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மா பேசியுள்ளார். அதில், ரிஷப் பண்ட் -ன் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை தான். இது துரதிஷ்டவசமானது. இந்திய அணி நிர்வாகம் அவரை நீண்ட காலத்திற்கு உதவுவார் என நம்பியது. பண்ட் மீது கேப்டனாக இருந்த விராட் கோலி எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சொதப்பிய போதெல்லாம் தொடர்ச்சியாக வாய்ப்பை கொடுத்துக்கொண்டே இருந்தார்.
உள்நாட்டு தொடர்கள்
டெஸ்ட் போட்டிகளில் முதலில் பண்ட் சொதப்பினார். எனினும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து அதன்பின்னர் சிறப்பாக ஆடினார். அதே போல தான் தற்போது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் சொதப்புகிறார். உள்நாட்டு போட்டிகளுக்கு திரும்புவதில் எந்த இழிவும் இல்லை. ஃபார்மில் இல்லாத போது, உள்ளூர் போட்டிகளுக்கு சென்று தயாராகி வரலாம். அங்கிருந்து மீண்டும் இந்திய அணிக்குள் இடம்பிடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும் என ராஜ்குமார் சர்மா கூறியுள்ளார்.
தேர்வுக்குழு நீக்கம்
பிசிசிஐ-ல் பதவி நீக்கம் செய்யப்பட்ட சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு வங்கதேச தொடர் வரையிலான வீரர்களை தேர்வு செய்துவிட்டனர். பண்ட்-ம் அதில் இடம்பிடித்துள்ளார். புதிய தேர்வுக்குழு இம்மாதம் பதவி ஏற்கும் என்பதால், இனி பண்ட்-க்கு வாய்ப்பு தரலாமா வேண்டாமா? என்பதை அவர்கள் தான் முடிவு செய்வார்கள்.