சுவாரஸ்ய சம்பவம்
இந்நிலையில் இந்த போட்டியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி இன்னிங்ஸின் போது, சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 19வது ஓவர் வரையில் 28 பந்துகளில் 49 ரன்களை அடித்திருந்தார். அரைசதம் அடிக்க கடைசி ஓவரில் இன்னும் ஒரு ரன் தேவை என்ற சூழலில் தான் தினேஷ் கார்த்திக் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார்.
கோலியின் தியாகம்
20வது ஓவரின் முதல் பந்திலேயே தினேஷ், நேராக கோலியிடம் சென்று ஸ்ட்ரைக் கொடுக்கவா?? என்பது போல் கேட்டார். ஆனால் கோலியோ, அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், எனது அரைசதத்தை விட, அணியின் ஸ்கோரே நமக்கு முக்கியம், சிக்ஸர்களாக தூக்கி அடி என சைகை காட்டி எந்தவித சுயநலமும் இல்லாத முடிவை எடுத்தார். இதனை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
சிறப்பான பணி
விராட் கோலி கூறியதை போலவே தினேஷ் கார்த்திக் தனது பணியை சரியாக செய்து முடித்தார். ரபாடா வீசிய கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 18 ரன்களை குவித்தார். இதனால் 20 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 237 ரன்களை குவித்தது.
நல்ல விஷயம்
ஒருவேளை கோலி மட்டும் தனது அரைசதத்திற்காக ஸ்ட்ரைக் கேட்டிருந்தால் 10 ரன்கள் வரை இந்தியாவுக்கு குறைந்திருக்க வாய்ப்புள்ளது. 221 ரன்கள் வரை அசால்ட்டாக விரட்டிய தென்னாப்பிரிக்க அணி இன்னும் 10 ரன்கள் வரை குறைவாக இருந்திருந்தால் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்திருக்கும். எனவே கோலியின் முடிவால் இந்தியா ஒருவிதத்தில் தப்பியது என்று தான் கூற வேண்டும்.