டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து வெற்றி
நியூசிலாந்துடன் கடந்த ஆண்டு இறுதியில் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் வீரர் ஜெர்மைன் பிளாக்வுட் சதமடித்து அந்த அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆயினும் அந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி கொண்டது. மேலும் தொடரையும் கைப்பற்றியது.
சிறப்பான ஆட்டம்
ஆயினும் பிளாக்வுட்டின் சதம் அனைவராலும் பாராட்டப்பட்டது. 141 பந்துகளில் 104 ரன்களை அடித்து அதகளம் செய்திருந்தார் பிளாக்வுட். இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸ்களும் அடக்கம். கடந்த 2014ல் தனது முதல் போட்டியில் விளையாடிய பிளாக்வுட் தொடர்ந்து தனது அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.
பெரிய அளவில் உதவி
இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் தான் சில நேரங்களில் சமூக வலைதளங்கள் மூலம் பேசியுள்ளதாகவும் மேலும் மேற்கிந்திய தீவுகளில் கடந்த இந்திய சுற்றுப்பயணத்தின்போதும் அவருடன் பேசும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் பிளாக்வுட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் சதமடிப்பது குறித்து தான் அவருடன் பேசியதாகவும் அது தனக்கு பெரிய உதவியாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
சிறப்பான ஆலோசனை
இதனிடையே, சக வீரர் ஆன்ட்ரூ ரஸ்ஸல்லுடனும் தான் தன்னுடைய பேட்டிங் குறித்து அதிகமாக விவாதித்துள்ளதாகவும் தன்னுடைய ஷாட் தேர்வு குறித்து அவர் அதிகமாக ஆலோசனைகள் வழங்குவார் என்றும் பிளாக்வுட் தெரிவித்துள்ளார். மேலும் அதிகமான ஷாட்களை அடித்து பௌலர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதே தன்னுடைய ஸ்டைல் என்றும் பிளாக்வுட் கூறியுள்ளார்.