இந்தியா தோல்வி
கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது. அதில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 374 ரன்களை குவித்த நிலையில், அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.
மைக்கேல் ஹோல்டிங் அறிவுறுத்தல்
அணியின் ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா முறையே 74 மற்றும் 90 ரன்கள் எடுத்தும் அணி வெற்றியை கைநழுவ விட்டது. இந்நிலையில் இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோர்களை சேஸிங் செய்ய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் விளையாட தோனி போன்ற ஒரு வீரர் மிகவும் அவசியம் என்று முன்னாள் மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் அறிவுறுத்தியுள்ளார்.
நெருக்கடியில் இந்திய அணி
தன்னுடைய யூடியூப் சேனில் பேசிய ஹோல்டிங், இந்திய அணியில் மிகச்சிறப்பான வீரர்கள் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் தோனி இல்லாமல் அந்த அணி மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளாகவும் குறிப்பிட்டுள்ளார். தோனி அணியில் இருந்தபோது சேஸிங்கில் இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.
தோனி பதற்றப்பட்டதில்லை
சேஸிங்கின் போது தோனி பதற்றப்பட்டதாக சரித்திரமே இல்லை என்றும் ஹோல்டிங் மேலும் தெரிவித்தார். இதற்கு காரணம் தன்னுடைய திறமை குறித்தும் சேஸிங்கை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் தோனி நன்கு தெரிந்து வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
தோனி போன்ற வீரர் அவசியம்
தற்போது இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சிறப்பாக உள்ளதாகவும் ஆயினும் மிடில் ஆர்டரில் ரன் சேஸிங்கை மேற்கொள்ள தோனியின் திறமை மட்டுமின்றி அவரது குணாதிசயங்களையும் கொண்ட ஒரு வீரர் அணிக்கு மிகவும் முக்கியம் என்றும் ஹோல்டிங் தெரிவித்தார். இந்த விஷயத்தில் தோனி மிகவும் சிறப்பானவர் என்றும் அவர் கூறினார்.