கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 5,90,000 பேருக்கும் மேல் பரவி உள்ளது. இந்த கட்டுரையை நீங்கள் படிக்கும் போது அது 6 லட்சத்தை தாண்டி இருக்கக் கூடும். 27,000 உயிர்களை இதுவரை காவு வாங்கி உள்ளது. இந்த எண்ணிக்கையும் ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வருகிறது.
உண்மையான பாதிப்பு தெரியாது
மேலே கூறப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உலக நாடுகளின் அரசாங்கங்களால் வழங்கப்பட்டது மட்டுமே. சில நாடுகள் உண்மையான எண்ணிக்கையை மறைத்து வருவதாகவும், சில நாடுகளால் துல்லியமான கணக்கை எடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சில பகுதிகள்
ஆக, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் உலகம் தன் கட்டுப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் இதுவரை பெரிய அளவில் இல்லை. எனினும், அங்கேயும் அது மெதுவாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த இரு வாரங்கள் முன்பு வரை நூறுக்கும் குறைவாக இருந்தது. ஆனால், தற்போது 880 பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஏப்ரல் 15 வரை, 21 நாட்களுக்கு லாக்டவுன் எனும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு மீறல்
மக்கள் வெளியே வராமல் இருப்பதன் மூலம் மனிதர்களில், இருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸை கட்டுப்படுத்தலாம். அதற்காகவே இந்த ஊரடங்கு உத்தரவு. எனினும், அந்த உத்தரவை மதிக்காமல் இந்தியாவில் பலர் வெளியே சுற்றி வருகின்றனர்.
|
விராட் கோலி வீடியோ
அதை கண்டித்து, எச்சரிக்கும் வகையில் பேசி உள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. ட்விட்டரில் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
குடிமகனாக பேசுகிறேன்
அவரது பதிவில், "ஹலோ, நான் விராட் கோலி. இன்று நான் இந்திய வீரராக பேசவில்லை. நாட்டின் குடிமகனாக பேசுகிறேன். கடந்த சில நாட்களாக மக்கள் கும்பலாக சுற்றி வருவதையும், ஊரடங்கு விதிகளை மதிக்காமல் இருப்பதையும், விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதையும் பார்க்கிறேன்" என்றார்.
சோசியல் டிஸ்டன்சிங் வேண்டும்
மேலும், "நாம் இந்த போராட்டத்தை மிக எளிதாக எடுத்துக் கொண்டதையே இது காட்டுகிறது. ஆனால், இந்த போராட்டம் அத்தனை எளிது அல்ல. நான் அனைவரையும் சோசியல் டிஸ்டன்சிங் மூலம் தள்ளி இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
கேள்வி
"அரசாங்கம் கூறும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். உங்கள் அலட்சியத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என ஒரு முறை சிந்தித்து பாருங்கள்" எனவும் கேள்வி எழுப்பி உள்ளார் கோலி.
நாட்டின் நலனுக்கு எதிரானது
மேலும், "நிபுணர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்கள் சொல்வதை கேளுங்கள். குழுவாக வெளியே செல்வது, விதிகளை மீறுவது ஆகியவற்றைக் காட்டிலும், நாம் கடமையை பின்பற்றினால் மட்டுமே இது வெற்றி பெறும். என்னைப் பொறுத்தவரை இது நாட்டின் நலனுக்கு எதிரானது." என குறிப்பிட்டுள்ளார் கோலி. இனியாவது வெளியே செல்வதை தவிர்ப்போம். பாதுகாப்பாக இருப்போம்.