2வது டெஸ்ட் தொடர்
அந்தவகையில் இன்று 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டது. ஒவ்வொரு அணியும் 3 தொடர்களை உள்நாட்டிலும், 3 தொடர்களை அயல்நாட்டிலும் ஆட வேண்டும். அதன்படி இந்திய அணி உள்நாட்டில் இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுடன் மோதுகிறது. அதேபோல் அயல்நாட்டு தொடர்களாக வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் விளையாடுகிறது. வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தொடராகும்.
கோலியின் கருத்து
இந்நிலையில் இந்தியாவுக்கான அட்டவணை குறித்து விராட் கோலி பேசியுள்ளார். அதில் அவர், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சிறப்பாக இருந்தது. மறக்கமுடியாத போட்டி அது. இறுதிப்போட்டி மட்டுமல்லாமல், அந்த தொடர் முழுவது வீரர்களின் அர்ப்பணிப்பை காண முடிந்தது. ரசிகர்கள் 2வது சீசனுக்காக ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
கோலியின் நம்பிக்கை
அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு இந்திய அணி புதிய புத்துணர்ச்சியுடன் களமிறங்கும். வரும் இங்கிலாந்து தொடரில் அணி முழுக்க சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவோம். அது தொடக்கத்திலேயே ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் என தெரிவித்துள்ளார். விராட் கோலி புத்துணர்சியான அணி என்று கூறியிருப்பதை பார்த்தால், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சரியாக விளையாடாத சீனியர் வீரர் புஜாரா அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது.
ஜோ ரூட் கருத்து
2வது சீசனில் இங்கிலாந்துக்கும் இது முதல் டெஸ்ட் தொடராகும். இதுகுறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் ரூட், இந்திய அணி அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவர்களை எங்களது சொந்த மண்ணில் எதிர்கொள்வது நல்லது தான். கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை தவறவிட்டோம். இந்த முறை அப்படி ஆகாது எனக்கூறினார்.